19/Jun/2021 01:28:59
புதுக்கோட்டை, ஜூன்: கொரோனா பேரிடரால் அறிவிக்கப்பட்டுள்ள முழு முடக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்க கலைஞர்களுக்கு புதுக்கோட்டை மரம் நண்பர்கள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால்,
தமிழகம் முழுவதும் முழு முடக்கத்தை தமிழக அரசு அறிவித்தது. இதில், கோயில் திருவிழாக்கள், ஊர் திருவிழாக்கள். கோயில் சுவாமி தரிசனம் ஆகிய நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக, தமிழகம் முழுவதும் திரைக்கலைஞர்கள், நாடக நடிகர்கள், மேடை
இன்னிசை கலைஞர்கள், நாட்டுப்புறக்கலைஞர் என அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரமும்
பாதிக்கப்பட்டது.
இச்சூழலில், வாழ்வாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வரும் புதுக்கோட்டையில் பழம் பெருமை வாய்ந்த முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தில் உள்ள கலைஞர்களுக்கு உதவும் வகையில், மரம் நண்பர்களால் அரிசிப்பைகள் ( தலா 10 கிலோ) நிவாரணப் பொருளாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், புதுக்கோட்டை மரம் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் ஜி.எட்வின், வழக்கறிஞர் குஞ்சிதபாதம், மரம் நண்பர்கள் பேரா.சா.விஸ்வநாதன், பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் மெஸ் மூர்த்தி, பழனியப்பா கண்ணன், பொறியாளர் ரியாஷ் கான், பொறியாளர் வி. இறையன்பு, முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத்தலைவர் எஸ்.எம்.இசையரசன், நாடக அமைப்பாளர் டி.எஸ். ராதா,ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருளை வழங்கினர்.
மேலும் மருத்துவர் ஜி.எட்வின், வந்திருந்த கலைஞர்களுக்கு, கொரானா வராமல் தடுப்பதற்கு, குறிப்பாக முகக் கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைபிடிப்பது போன்ற பல்வேறு வழிமுறைகளை எடுத்துக் கூறினார்.
முத்தமிழ் நாடக நடிகர்கள் சங்கத் தலைவர் எஸ்.எம்.இசையரசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.