14/Jun/2021 07:13:32
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது நாளாக 69 மையங்களில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட பொதுமக்கள் குவிந்தனர்.
ஈரோட்டில் கொரோனா 2-ஆவது
அலை வேகமாக பரவியது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது.
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் போட்டியாக பாதிப்பு அதிகரித்தது.
தற்போது தினசரி பாதிப்பில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து இரண்டாம் இடத்தில்
உள்ளது. இதையடுத்து பரவலை கட்டுப்படுத்த மாவட்ட
நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
முதலில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயது முதல் 59 வயது உட்பட்டவர்களுக்கும், பின்னர் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் ஈரோடு மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 2 லட்சத்து 42 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரத்து 580 பேருக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட 46 ஆயிரத்து 670 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக
சமீப காலங்களில் தடுப்பூசி போட பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது.
தனியார் ஆஸ்பத்திரியில் தடுப்பூசி போடுவது நிறுத்தி
வைக்கப்பட்டது
ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும்
தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த
ஒரு வாரமாக தடுப்பூசி கையிருப்பு இல்லாததால்
தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் 13 ஆயிரத்து 400 கோவிஷில்டு
தடுப்பூசிகள் வந்ததால் ஞாயிற்றுக்கிழமை முதல் 42 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
அதிகாலை 4 மணி முதலே தடுப்பூசி மையங்களுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கினர். முதல் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்பட்டன. ஈரோடு மாநகர் பகுதியில் 10 ஆரம்ப சுகாதார மையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் அந்த ஆரம்ப சுகாதார மையங்கள் அருகே உள்ள பள்ளிகளில் தடுப்பூசி முகாம் மாற்றப்பட்டு போடப்பட்டது. முதல் நாளில் மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்து 900 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து 2-வது நாளான திங்கள்கிழமை 69 மையங்களில் தடுப்பூசி போடும் பணி காலை 6 மணிக்கு தொடங்கியது. ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள மையத்திற்கு அதிகாலை 2 மணிக்கே பொதுமக்கள் தடுப்பூசி போட திரண்டு வந்து விட்டனர்.
இதேபோல் மற்ற மையங்களிலும் அதிக அளவில் மக்கள் திரண்டு விட்டனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் முதலில் வந்த 200 பேருக்கு மட்டுமே டோக்கன் அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதைப்போல் ஒரு சில மையங்களில் கோவேக்சின் இரண்டாம் டோஸ் மட்டும் செலுத்தப்பட்டது.