11/Nov/2020 05:09:25
ஈரோடு: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் மக்கள் இப்போது கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர். கடைவீதிகள் ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
தமிழகம் முழுவதும் தீபாவளியை யொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வெளி மாவட்ட மக்கள் பல்வேறு வேலைகளில் ஈடுபடுகின்றனர். முக்கியமான பண்டிகைக்கு தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இவர்களுக்கு என்று போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக ஈரோடு மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு நாளை முதல் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 11 கிளைகளில் 800 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் தாக்கம் காரணமாக சில மாதங்களாக பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
பின்னர் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் உடன் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் தற்போது 550 உள்ளூர் ,வெளிமாவட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாக 100 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை,திருச்சி,சென்னை, கோவை ,திருப்பூர் ,சேலம், உட்பட பல்வேறு மாவட்டங்களுக் கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திற்கு தற்போது தினமும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளிக்கு கூடுதலாக பேருந்துகள் தேவைப்பட்டால் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.