13/Jun/2021 05:19:07
ஈரோடு, ஜூன்: ஆவின் பால் பொருட்கள் விற்பனையை 6 மாதத்திற்குள் 1.50 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஈரோடு பழைய பாளையத்தில் செயல்படும் ஆவின் விற்பனையகம், சம்பத் நகர் ஆவின் பால் விற்பனையகம், மாநகராட்சி சுப்பராயலு நகர் பகுதியில் செயல்படும் ஆவின் பால் விற்பனையகம், மாநகராட்சி அலுலவகம், ரயில் நிலையம் பகுதியில் உள்ள ஆவின் விற்பனையகம், ஸ்டோனி பிரிட்ஜ் அருகே உள்ள நவீன பால், பால் பொருட்கள் விற்பனையகங்களில் உள்ள பாலின் தரத்தை ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, சித்தோடு அருகே உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில்(ஆவின்) பால் சேகரிக்கும் விதம், பால் பொருட்கள் தயாரிக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் பால்வளத்துறை அமைச்சர் நாசர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் 512 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினசரி சராசரியாக 2 லட்சத்து 23 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் 52 தொகுப்பு பால் குளிரகங்கள் இயங்கி வருகிறது.
முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் உத்தரவுபடி அனைத்து வகையான
பாலின் விற்பனை விலை ரூ. 3 குறைக்கப்பட்டதை
தொடர்ந்து ஆவின் பால் விற்பனை முகவர்கள்
மற்றும் ஆவின் பாலகங்களில் ஆய்வுகள் மேற்கொண்டு
பால் நுகர்வோர்களுக்கு
விலை குறைக்கப்பட்டதற்கான
பலன்கள் கிடைப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. ரூ. 3 விலை குறைக்கப்பட்டதால்
தினமும் 2,000 லிட்டர்
விற்பனை அதிகரித்து தற்போது சராசரியாக 54 ஆயிரம்
லிட்டர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தளர்த்தியவுடன் விற்பனை 65,000 லிட்டராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் பால் பொருட்கள் விற்பனை மாதம் ஒன்றுக்கு ரூ.1கோடி என்று இருந்த நிலையில் தற்போது ரூ. 1.15 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 273 ஆவின் முகவர்கள் உள்ளனர். மொத்த விற்பனையாளர்கள் 13 பேர் உள்ளனர். 93 ஆவின் முகவர் பாலகங்களும், ஆவின் நேரடியாக நடத்தும் இரண்டு ஹைடெக் பாலகங்களும் உள்ளன.
ஈரோடு ஒன்றியத்தில் தயாரிக்கப்படும் நெய் கத்தார், சிங்கப்பூர் ,இலங்கை துபாய் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 500 பாலகங்கள் திட்டத்தில் ஈரோடு ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்ட 15 எண்ணிக்கையில் தாளவாடி, சத்தியமங்கலம், கவுந்தபாடி, பெருந்துறை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் நவீன பாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
ஈரோடு மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்துக்குட்பட்ட கால்நடை தீவன தொழிற்சாலையில் தினமும் 150 மெட்ரிக் டன் கால்நடை தீவனம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இவை தமிழகம் முழுவதும் உள்ள
அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கும் தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. இவை லாபகரமாக இயங்க
முழு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு 10 நாள்களுக்கு ஒருமுறை ரூ
6.80 கோடி
வழங்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் நகரும் பாலகம் மற்றும் ஒப்பந்த வாகனங்கள் மூலம் பால் எல்லா இடங்களிலும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பால் உற்பத்தியாளர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பாலையும் கொள்முதல் செய்து பாதுகாப்பான முறையில் பதப்படுத்தி சுகாதாரமான முறையில் பால் விற்பனை நடைபெற்று வருகிறது.
அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட பால் விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் அதுகுறித்து நிர்வாகத்திடம் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார் அமைச்சர் சா.மு.நாசர்.
இந்த ஆய்வின்போது, ஈரோடு டி.ஆர்.ஓ., முருகேசன், அந்தியூர் எம்.எல்.ஏ. ஏ.ஜி. வெங்கடாச்சலம், ஆவின் நிர்வாக இயக்குனர் நந்தகோபால் மற்றும் ஆவின் தலைமை அதிகாரிகள் உடன் இருந்தனர்.