logo
கறம்பக்குடி அருகே இருவரை கட்டிப்போட்டு அடகு கடையில்  துளையிட்டு திருட முயற்சி.

கறம்பக்குடி அருகே இருவரை கட்டிப்போட்டு அடகு கடையில் துளையிட்டு திருட முயற்சி.

09/Jan/2021 07:28:10

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு இருவரை கட்டிப்போட்டு விட்டு அடகு கடையில் துளையிட்டு திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 கறம்பக்குடி அருகேயுள்ள துவாரில் உள்ள வணிக வளாகத்தில், மஞ்சம்பட்டியைச் சேர்ந்த முருகேசன்(40) நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். இவர், வழக்கம்போல், வெள்ளிக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நள்ளிரவு கடையின் பின்புறம் சத்தம் கேட்டு,உறங்கிக்கொண்டிருந்த பக்கத்து கடையில் உணவகம் நடத்திவரும் சின்னையா(50), ஊழியர் லெட்சுமணன்(47) ஆகியோர் சென்று பார்த்துள்ளனர். அப்போது, சில மர்மநபர்கள் நகை அடகு கடையின் பின்பக்க சுவற்றில் துளையிட்டு கொண்டிருந்துள்ளனர். இதைப்பார்த்த இருவரும் அவர்களை தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதனால்,ஆத்திரமடைந்த மர்மநபர்கள் சின்னையா, லெட்சுமணன் இருவரையும் மடக்கிப்பிடித்து, கயிற்றால் கட்டி அருகில் இருந்த தைலமரக்காட்டில் போட்டுவிட்டு, மீண்டும் கடையின் கதவை உடைத்து திருடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கடையில் பொருத்தப்பட்டிருந்த சைரன் சத்தமிடவே அங்கிருந்து மர்மநபர்கள் தப்பியோடிவிட்டனர்.சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து இருவரையும் மீட்டுள்ளனர். தொடர்ந்து, தகவலறிந்து அங்கு சென்ற கறம்பக்குடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Top