08/Jun/2021 11:02:59
புதுக்கோட்டை, ஜூன்: பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பெருந்தொற்று காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு பதவியேற்ற 30 நாளில் நடைபெற்ற வியத்தகு சாதனைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் பாராட்டுகிறோம்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்கி அதன் மூலம் பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது வரவேற்கதக்கது.
கொரோனா தொற்று பாதிப்பு நீங்காத நிலையில் மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தப்படாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,ஆசிரியர் சங்கங்கள்,மருத்துவக் குழுவினர் , கல்வியாளர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்ட பின்பே தமிழக முதல்வர் இந்த முக்கிய முடிவை அறிவித்துள்ளதை பாராட்டி வரவேற்கிறோம்.
கொரோனா பேரிடலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி,எதிர்கட்சி ,தோழமைக் கட்சி என்பதை கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்ற வேண்டும்.தமிழக மக்கள் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளது பாராட்டுக்குரியது.
தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வரும் 1212 செவிலியர்களுக்கு நிரந்தர பணி அளிக்கப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா நோய்த்தொற்றால் பெற்றோர்களை இழந்து வாடும் குழந்தைகளுக்கு ரூ 5 இலட்சம் வைப்புத் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்கள்.
இவ்வாறு இந்த ஒரு மாத ஆட்சி காலத்தில் ஒவ்வொரு நாளும் போர்க்கால அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள்,அமைக்கப்பட்ட குழுக்கள்,நியமிக்கப்பட்ட அலுவலர்கள் என தமிழக அரசு செயல்படும் விதம் பாராட்டும் படியும்,தமிழக அரசின் மீது ஒரு மிகப்பெரிய நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளது என கூறியுள்ளார்.