07/Jun/2021 12:39:46
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு விரைவாக வெளியிட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக, சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வை மத்திய
அரசு ரத்து செய்தது. அதைப் பின்பற்றி, தமிழக பாட திட்டத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து
செய்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.அத்துடன்,
பிளஸ் 2 மாணவர்களுக்கு, மதிப்பெண்ணை நிர்ணயம் செய்வதற்கான,
வழிகாட்டுதல்களை தயாரிக்க,
பள்ளி கல்வி முதன்மை செயலர் உஷா தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டு
உள்ளது.
இதற்கிடையில், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்
வழங்குவதற்கான வழிகாட்டுதல்களையும்,
அரசு தாமதமின்றி வெளியிட வேண்டும் என
பெற்றோர் மற்றும் ஆசிரியர் தரப்பில் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும்
பிளஸ் 1 மாணவர்களுக்கு, தேர்வே நடத்தாமல் ஏற்கெனவே,
ஆல் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களுக்கு மதிப்பெண் எப்படி
நிர்ணயிக்கப்படும் என,
பள்ளி கல்வித்துறை இன்னும் அறிவிக்கவில்லை.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு,
அரையாண்டு, திருப்புதல் தேர்வு என, எந்தவித தேர்வும் கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை.எனவே, பத்தாம் வகுப்பில் எதன்
அடிப்படையிலும் மதிப்பெண் நிர்ணயிக்க முடியாத சூழல்
உள்ளது. அதற்கு பதில், ஒன்பதாம் வகுப்பில்
நடத்தப்பட்ட பருவத் தேர்வுகளின் மதிப்பெண்ணை கணக்கில்
எடுக்கலாம் என, அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன.
எனவே, இதுகுறித்து, பள்ளி கல்வித் துறை தாமதிக்காமல் முடிவெடுத்து,
மதிப்பெண் வழிகாட்டுதலை அறிவிக்க வேண்டும் என
பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய கல்வி ஆண்டு பிறந்துள்ளதால்,
மாணவர்களை பிளஸ் 1 மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில்
சேர்க்க மதிப்பெண் தேவைப்படுவதால் இந்த விவகாரத்தில் கல்வித்துறை
காலம் தாழ்த்த வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.