logo
தினமும் காபி குடிக்கும் கோயில் யானை: தூத்துக்குடி மக்கள் வியப்பு

தினமும் காபி குடிக்கும் கோயில் யானை: தூத்துக்குடி மக்கள் வியப்பு

01/Dec/2020 09:41:00

தூத்துக்குடி ஆழ்வார்திருநகரியில் காலை நேரத்தில் காபி குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள கோயில் யானையை பொதுமக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நவ திருப்பதி கோயில்களில் கடைசி தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் ஆதிநாயகி  யானை உள்ளது. கோயில் வளாகத்தில் இந்த யானையை பாகன் பராமரித்து வருகிறார். இதேபோன்று திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயிலுக்கு சொந்தமான குமுதவல்லி யானை, இரட்டை திருப்பதி அரவிந்த லோசனர் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான லட்சுமி யானை ஆகியவற்றையும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் வளாகத்திலேயே பாகன்கள் பராமரித்து வருகின்றனர்.

ஆதிநாயகி யானையை தினமும் காலையில் பாகன் நடைபயிற்சிக்கு அழைத்து செல்வது வழக்கம். இதேபோன்று மற்ற இரண்டு யானைகளும் தினமும் காலையில் பாகன்களுடன் நடைபயிற்சியாக அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று வருவது வழக்கம்.

நடைபயிற்சிக்கு பாகனுடன் புறப்பட்டு செல்லும் ‘ஆதிநாயகி‘ யானை, கோயில் அருகில் உள்ள ரத வீதிகள், பஜார், மெயின் ரோடு வழியாக சென்று மீண்டும் கோயிலுக்குத் திரும்பும். நடைபயிற்சியின் போது மேல பஜாரில் உள்ள காபி கடையில் பாகன் காபி குடிப்பது வழக்கம்.

அப்போது நன்கு ஆற்றப்பட்டு சூடு குறைந்த காபியை வாங்கி யானைக்கும் கொடுக்கிறார். அதனை யானை ஆர்வத்துடன் விரும்பி பருகுகிறது.தினமும் காலையில் ஆதிநாயகி யானை அந்த கடையில் காபி அருந்த தவறுவது இல்லை. யானை காபி குடிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.


 


Top