04/Jun/2021 02:25:41
ஈரோடு, ஜூன் : கொரோனா தொற்றுக்காக தேசிய அளவில் பொது முடக்கம் அறிவிக்காமல், மாநிலத்துக்கு மாநிலம் முழு முடக்கம் வேறுபட்டதன் காரணமாக தினமும் ரூ.150 கோடி மதிப்பில, 6.5 கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதித்துள்ளது.
தமிழகத்தில், 8 லட்சம் விசைத்தறியில் நேரடியாக
10 லட்சம் பேரும், மறைமுகமாக, 10 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். தினமும்
ரூ. 150 கோடி மதிப்பில் 6.5 கோடி மீட்டர் துணி
உற்பத்தியாகும். வாரத்துக்கு,
45 கோடி மீட்டர் துணி உற்பத்தியாவதால், ஒரு தொழிலாளிக்கு வாரம்தோறும்
ரூ. 3,000 வரை வருமானம் கிடைக்கும். தற்போது, வெவ்வேறு
மாநிலங்களில் வெவ்வேறு நிலையில் ஊரடங்கு அறிவித்ததால்
விசைத்தறித் தொழில் முற்றிலும் முடங்கிப்போனது.
இதுபற்றி, தமிழ்நாடு விசைத்தறி உற்பத்தியாளர்கள்
சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் சுரேஷ் கூறியதாவது:
விசைத்தறியில் தமிழகத்தில் உற்பத்தியாகும் துணிகள், டில்லி, மஹராஷ்டிரா என பல மாநிலத்துக்கு அனுப்பி பிராசசிங், டையிங், பிரிண்டிங், ஆயத்த ஆடை மாற்றம் செய்து பல மாநிலத்துக்கு விற்பனைக்கு செல்லும். இப்பணி பல மாநிலங்களையும் மையமாக கொண்டது.
கொரோனா முதல் அலையில், மத்திய அரசு, மார்ச் 22-இல் தேசிய அளவில் பொது முடக்கம் அறிவித்தது. ஜூனில் தளர்வு அறிவித்து, விசைத்தறிகள் இயங்கின. இம்முறை வடமாநிலங்களில் கடந்த சில மாதத்துக்கு முன் முடக்கம் அறிவித்தபோது, தமிழகத்தில் முடக்கம் இன்றி விசைத்தறிகள் செயல்பட்டன. துணிகளை வடமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் தேங்கியது. விலையும் சரிந்து போனது.
முதல் அலை முடக்கம் துவங்கி, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், கோவில், திருவிழா, பண்டிகை போன்றவை இல்லை. பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்கள் கூட முழுமையாக இயங்கவில்லை.
எனவே, துணியின் தேவை குறைந்து, விற்பனை
இல்லை. 50 முதல், 60 சதவீதமே கடந்தாண்டு உற்பத்தி
செய்தோம். தற்போது வடமாநில முடக்கத்தால் இரண்டு
மாதம் துணிகள் தேங்கியது. தற்போது தமிழக
முடக்கத்தால், துணி
உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு, 2 மாதமாக, 30 சதவீத துணிகள் கூட
உற்பத்தியாகவில்லை.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து முடக்கங்களை அறிவித்தால், தொழில், தொழிலாளர்கள், உற்பத்தி பாதிக்காது. தற்போதைய பாதிப்பை ஈடுகட்டுவதும், தொழிலாளர்களுக்கு வேலையை மீண்டும் வழங்குவதும் சிரமமானது.
மீண்டும் விசைத்தறி உற்பத்தி துவங்கினாலும், பாதி அளவே தொழிலாளர்களுக்கு வேலை வழங்க முடியும். அவர்கள் வாழ்வாதாரம் காக்க மட்டுமே பணியை தொடர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் இயல்பு நிலை திரும்பி, முழு உற்பத்தியை துவங்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றார்.