03/Jun/2021 09:40:23
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதைத் தொடர்ந்து விவசாயிகள் குறுவை சாகுடியினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே குறுவை சாகுடிக்கு தேவையான உரங்கள்
அனைத்தும் தனியார் உர விற்பனை நிலையங்கள்
மற்றும் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் யூரியா
4,294 மெட்ரிக் டன்களும், டி.ஏ.பி 962 மெட்ரிக் டன்களும், பொட்டாஷ்
1,340 மெட்ரிக் டன்களும், காம்ப்ளக்ஸ் 3,384 மெட்ரிக். டன்களும் மாவட்டத்திலுள்ள உர விற்பனை நிலையங்களில்
இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு டிஏபி உரத்தின் விற்பனை விலையினை அதிகபட்ச விலையாக மூட்டைக்கு ரூ. 1,200 -க்கு என நிர்ணயம் செய்துள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்ட சில்லரை உர விற்பனையாளர்கள் டிஏபி உரத்தினை மத்திய அரசு நிர்ணயித்த அதிகபட்ச விலையான மூட்டைக்கு ரூ.1,200-க்கு மேல் விற்பனை செய்யக்கூடாது.
மேலும் உர விற்பனை நிலையங்களில்
விற்பனை முனையக் கருவி மூலம் விநியோகம் செய்யப்படுவதனால் விவசாயிகள் உர விற்பனை நிலையத்திற்குச்
செல்லும் போது ஆதார் அட்டையினைக் கொண்டு
சென்று உரம் வாங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. உரம் வாங்கும்போது கட்டாயமாக
ரசீது கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
உரம் சம்பந்தப்பட்ட கூடுதல் விவரங்களுக்கு தரக்கட்டுப்பாடு
வேளாண்மை உதவி இயக்குநர் அவர்களை 9080709899 என்ற அலைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம். எனவே புதுக்கோட்டை மாவட்ட
சில்லரை உர விற்பனையாளர்கள் டிஏபி உரத்தினை மத்திய அரசு நிர்ணயித்த அதிகபட்ச விலையான
மூட்டைக்கு ரூ.1,200-க்கு மேல் விற்பனை செய்வதாக புகார் வந்தால் உரக்கட்டுபாடு (ஆணை 1985) சட்டத்தின்படி உரிய
நடவடிக்கை எடுக்கப்படும்.