02/Jun/2021 01:42:30
ஈரோடு, ஜூன்: ரேஷன் கடை மூலம் 14 வகையான மளிகைப் பொருட்கள்: ஈரோட்டில் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கடந்த மாதம் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் நிவாரண தொகை அனைத்து ரேஷன் கடைகள் மூலம் சமூக இடைவெளி கடைப்பிடித்து வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 1152 ரேஷன் கடைகள் மூலம் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட அட்டைதாரர்கள் கொரோனா நிவாரண தொகையான ரூ.2 ஆயிரத்தை ரேஷன் கடையில் சென்று பெற்றுக் கொண்டனர்.
கருணாநிதி பிறந்த நாளான ஜூன்3 முதல் தமிழக முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளில் கொரோனா 2-ஆம் கட்ட நிவாரண தொகையான ரூ.2000 மற்றும் உப்பு கோதுமை மாவு, உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு உள்பட 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் நிவாரணத் தொகை,மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நாளொன்றுக்கு 200 பேர் வந்த பொருட்கள் வாங்கும் வகையில் டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.