logo
ஈரோட்டில் தினமும் அதிகரிக்கும் தொற்று கிராம பகுதியில் வீடு வீடாக பரிசோதனை: சுகாதாரத் துறையினர் நடவடிக்கை

ஈரோட்டில் தினமும் அதிகரிக்கும் தொற்று கிராம பகுதியில் வீடு வீடாக பரிசோதனை: சுகாதாரத் துறையினர் நடவடிக்கை

31/May/2021 05:22:43

ஈரோடு, மே: ஈரோட்டில் தினமும் அதிகரிக்கும் தொற்று உள்ள கிராம பகுதியில் வீடு வீடாக  சளி, காய்ச்சல் பரிசோதனை செய்ய சுகாதாரத் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு போட்டியாக தொற்று வேகமாக பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதேபோல் தினசரி உயிரிழப்பு அதிகரித்து வருவது மக்களிடையே  அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது. முதலில் ஈரோடு நகரப்பகுதியில் வேகமாக பரவி வந்த தொற்று தற்போது கிராமப்புற பகுதியில் குடும்பம் குடும்பமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த  ஈரோடு மாவட்டத்தில் உள்ள 225 கிராம  ஊராட்சிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கிராம செயலாளர்கள் ,சுகாதாரத் துறையினர், போலீசார் தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட் டுள்ளது. 100 வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று சளி காய்ச்சல் உள்ளதா என கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கணக்கெடுப்பின் போது வீட்டில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அவர்கள் பற்றிய விவரங்களை தெளிவாக எடுத்து வருகின்றனர். பின்னர் அவர்கள் வீடுகளில்  தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு ஆர்டி-பி.சி. ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் தொற்று ஏற்பட்டவர்களுக்கு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கிராம ஊராட்சி பகுதியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வெளிநபர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும் கொரோனா குறித்து அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

Top