logo
 புதுக்கோட்டை  மாவட்டம் முழுவதும் தளர்வில்லா முழு முடக்கத்தை மீறியதாக  168 வழக்குகள் பதிவு-163 வாகனங்கள் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தளர்வில்லா முழு முடக்கத்தை மீறியதாக 168 வழக்குகள் பதிவு-163 வாகனங்கள் பறிமுதல்

25/May/2021 01:56:22

புதுக்கோட்டை மே:   புதுக்கோட்டை  மாவட்டம்  முழுவதும் முழு ஊரடங்கை மீறியதாக  168 வழக்குகள் பதிவு செய்து, 163 வாகனங்களை  போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.



தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் இதனைக் கட்டுப்படுத்த  அரசு போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மே10 முதல் மே 24-ஆம் தேதி வரை தளர்வுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்களின்  ஒத்துழைப்பின்மை,  விதி மீறல்கள் போன்ற செயல்களால் கொரோனா தொற்றின் தாக்கம் குறையவில்லை


இந்நிலையில், முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்தக்கட்சி எம்எல்ஏ-க்கள் குழுக்கூட்டம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் தளர்வில்லாத முழு  முடக்கத்தை கட்டாயம் அமல்படுத்த வேண்டுமென  வலியுறுத்தினர்.  இதையடுத்து மே.24 -ஆம் தேதி முதல் மே.31 -ஆம் தேதி வரை மருத்துவமனை, மருந்துக்கடை, வங்கிகள், ஏடிஎம், பால், பத்திரிகைகள் விநியோகம், ஆன்லைன் வணிகம் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் மூடப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரைபுதுக்கோட்டை, பொன்னமராவதி, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, மணமேல்குடி உள்பட 60 -க்கும் மேற்பட்ட   இடங்களில் தடுப்புகள் அமைத்து 300 -க்கும் மேற்பட்ட போலீஸார் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 புதுக்கோட்டைநகர பகுதியில்   அண்ணாசிலை , புதிய பேருந்து  நிலையம், பழைய பேருந்து நிலையம் திருக்கோகர்ணம், மேட்டுப்பட்டி அரிமளம் சாலை,  மாலையீடு, கட்டியாவயல். அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட பகுதிகள் தடுப்புகள் அமைத்து   போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளான புதிய பேருந்து நிலையம், கீழ ராஜவீதி, தெற்கு ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி உள்பட பல்வேறு வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி  காணப்பட்டது. 


மாவட்டம் முழுவதும் தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிவு  வாகனங்கள்  பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் நீதிமன்றம் மூலமே திரும்பப் பெற முடியும் என்று மாவட்ட எஸ்பி  பாலாஜிசரவணன்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், முழு முடக்கம் அமலான முதல்  நாளான திங்கள்கிழமை மாவட்டம் முழுவதும் போதிய காரணங்கள் இல்லாமல் வெளியில் சுற்றியதற்காக  168 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் 163 வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

 மாவட்டம் முழுவதும் ஏடிஎஸ்பி,  டிஎஸ்பிக்கள் தலைமையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்  உள்பட  900 -க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 


Top