23/May/2021 04:35:08
ஈரோடு, மே: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதேபோல் மாநகர் பகுதியிலும் தொடர்ந்து தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. மாநகர் பகுதியில் பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகர் பகுதியில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் குடியிருப்புப் பகுதிக்கு நேரடியாக வந்து மளிகை, காய்கறி பொருட்களை வாகனங்களில் வந்து விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.இதற்கு மாநகராட்சியும் அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக வண்டிகளில் காய்கறி மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. காய்கறி, மளிகை கடைகளுக்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் கூறியதாவது:
ஈரோடு மாநகர் பகுதியில் நாளை முதல் தளர்வு இல்லாத முழு முடக்கம் அமல்படுத்தப்படுவதையொட்டி 55 வாகனங்கள் மூலம் மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு சென்று காய்கறி விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் இந்த வாகனங்கள் சென்று காய்கறி விற்பனையில் ஈடுபடும். மக்கள் தங்கள் பகுதிக்கு வரும்போது காய்கறிகளை வாங்கிக் கொள்ளலாம்.
இதேபோல் பலசரக்கு வினியோகம் செய்ய நேற்றுவரை 10 வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று மேலும் சில வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். மாநகராட்சி சார்பில் வாகனங்களில் விற்பனை செய்பவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விடும். அவர்கள் எந்தெந்த நாட்களில் எந்த பகுதியில் விற்பனை செய்கிறார்கள் என்பதை முன்கூட்டியே மாநகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.