17/Jun/2021 07:57:40
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாநகராட்சியில் உள்ள 10 மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக முதல்நாள் இரவிலிருந்தே காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்
வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் முதலில் 100 மையங்களிலும், தனியார்
மருத்துவமனைகளில் போடப்பட்டு
வந்தன. இந்நிலையில் மாவட்டத்தில் 2-ஆவது அலை தாக்கம் காரணமாக பாதிப்பு
அதிக அளவில் இருந்து வந்தது.
இதையடுத்து பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள
அதிக ஆர்வம் காட்டினர். தடுப்பூசி போடும்
மையங்களில் குவிய தொடங்கினர்.இந்நிலையில் தடுப்பூசி
தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு தனியார் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும்
கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 82 ஆயிரம்
பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை தடுப்பூசி கையிருப்பு
இல்லாததால் 7 நாட்களுக்கு மாவட்டத்தில் தடுப்பூசி போடவில்லை.
இந்நிலையில் 13,400 கோவிஷில்டு
தடுப்பூசி வந்ததை அடுத்து கடந்த 13, 14- ஆகிய
தேதிகளில்
மாவட்டம் முழுவதும் உள்ள 69 மையங்களில் தடுப்பூசி
போடும் பணி மீண்டும் தொடங்கியது. இந்நிலையில்
தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் கடந்த 15-ஆம்
தேதி மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும்
பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
மாநகர் பகுதியில் உள்ள 10 ஆரம்ப
சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடவில்லை. இந்நிலையில்
வியாழக்கிழமை ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள
10 மையங்களில் தடுப்பூசி போடப்பட வேண்டும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை யடுத்து புதன்கிழமை இரவு முதலே ஒரு சில மையங்களில் தடுப்பூசி போட
மக்கள் காத்திருக்கத் தொடங்கினர்.
ஈரோடு சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள தடுப்பூசி மையத்தில் இரவு 9 மணிக்கு ஒரு சில மக்கள் தடுப்பூசி போடுவதற்காக
வந்திருந்தனர். அவர்கள்
தங்கள் கையில் பிஸ்கெட் தண்ணீர் வைத்திருந்தனர்.
இன்னும் சில மையங்களில் நள்ளிரவு ஒரு
மணி முதலே மக்கள் குவியத் தொடங்கினர்.
இதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
காலை 6 மணி முதல் 10 மையங்களிலும்
தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஒவ்வொரு
மையங்களிலும் 200 கோவிஷில்டு,
100 கோவேக்சின் என்று பிரித்து 10 மையங்களில் இன்று
3000 தடுப்பூசிகள் போடப்பட்டன. முதலில் வந்த 300 பேருக்கு
மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.
மீதம் உள்ளவர்களை போலீசார் திருப்பி அனுப்பிவிட்டனர்.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் பணியை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி
பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையாளர் மா.இளங்கோவன் உள்பட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர். புறநகர்
பகுதியில் உள்ள மையங்களில் தடுப்பூசி போடவில்லை.