20/May/2021 05:13:54
ஈரோடு, மே: முழுமுடக்கம் காரணமாக ஈரோட்டில் விசைத்தறிகள் தொடர்ந்து மூடப்பட்டதால் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு, வீரப்பன்சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம்
உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.
நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான்
துணி உற்பத்தி செய்யப்பட்டு மராட்டியம், மத்திய
பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், தில்லி, கொல்கத்தா
உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பபட்டு வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிக்கப்பட்டது. மேலும் கடந்த 42 நாட்களாக மேலாக வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.250 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் விசைத்தறி உற்பத்தி 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டு இயங்கியது.
இதனால் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியான இடத்தில் 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வந்ததால் விசைத்தறி உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து கடந்த 6-ஆம் தேதி முதல் முழு உற்பத்தியை நிறுத்தினர். இதைத் தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரம் விசைத்தறிகள் உற்பத்தியைத் தொடரமுடியாமல் மூடப்பட்டுள்ளது.
விசைத்தறிகளின் இந்த முழு முடக்கத்தால் நாளொன்றுக்கு ரூ. 7 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பி இருக்கும் சுமார் 50 ஆயிரம்
தொழிலாளர் வேலைவாய்ப்பை இழந்து தவிப்பதால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.