12/May/2021 10:47:01
ஈரோடு, மே: ஈரோட்டில் 8 வயது சிறுமி தனது ஒரு வருட உண்டியல் சேமிப்பு பணத்தை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்காக ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி. கதிரவனிடம் அளித்தார்.
ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் கம்யூட்டர் டிசைனிங் பணி செய்து வருகிறார்.இவருடைய 8 வயதான மூத்த மகள் தன்ஷிகா ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது தந்தை சண்முகவேல் தரும் பணத்தை உண்டியலில் சேமித்து வந்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் , முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதி வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
அந்த வகையில் தன்ஷிகா தனது தந்தை சண்முகவேலுடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஆட்சியர் சி. கதிரவனை நேரில் சந்தித்து தனது ஒரு வருட சேமிப்பு பணம் சுமார் ரூ. 2500 தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.
பணத்தை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கதிரவன் தன்ஷிகாவை பாராட்டினார். இதனையடுத்து பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்லக்கூடாது, கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் அரசு சொல்வதை கேட்க வேண்டும் என தன்ஷிகா கேட்டுக்கொண்டார்.