logo
ஈரோட்டில் சாலையில் தனியாக சென்ற பெண்ணிடம் நகையை பறித்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது

ஈரோட்டில் சாலையில் தனியாக சென்ற பெண்ணிடம் நகையை பறித்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் கைது

11/Feb/2021 07:14:30

ஈரோடு- பிப்: ஈரோட்டில் சாலையில் தனியாக சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வழக்கில் தொடர்புடைய 5 பேரை போலீஸார்  கைது செய்தனர். அவர்களிடமிருந்த நகை, இருசக்கர வாகனம், கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

 ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள தொட்டி பாளையத்தை சேர்ந்தவர் திருச்செல்வி. இவர் அக்ரஹாரம் பகுதியிலுள்ள தோல் பதனிடும் ஆலையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜனவரி மாதம் 7-ஆம் தேதி வேலை முடித்து விட்டு சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த நபர்கள் 80ஆயிரம் மதிப்புள்ள  தங்க சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். 

சம்பவம் நடந்தபோது சப்தம்போட்ட திருச்செல்வியின் வாய், காது உள்ளிட்ட இடங்களில் கத்தியால் குத்தி கிழித்து தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு  அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் படுகாயமடைந்த திருச்செல்வி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கருங்கல்பாளையம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

இந்நிலையில்  அக்ரஹாரம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேரை பிடித்து விசாரனை செய்ததில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். அவர்கள் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த சாம்சன், திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த சிவன் பாண்டி , கார்த்திக்,முகமது நசீர் மற்றும் சக்திவேல் என்பதும் இவர்கள் அக்ரஹாரத் தில் நடந்த தங்க சங்கிலி பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது. 

இதனையடுத்து அவர்களிடமிருந்து 8 பவுன் தங்க சங்கிலி,இரண்டு இருச்சக்கர வாகனம்,இரண்டு கத்தி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும்  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Top