12/May/2021 04:03:13
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுவதைக் கண்காணிக்க வேண்டும் என்றார் புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அரசு கைத்தறி, துணிநூல்துறை அரசு முதன்மைச்செயலருமான ஷம்பு கல்லோலிகர்.
மாவட்ட கோவிட் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷம்புகல்லோலிகர் பங்கேற்று மேலும் பேசியதாவது:
முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் நோய் தொற்றை தடுக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை குறித்தும்,
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளின் விவரம், ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை, கோவிட் பரிசோதனைகளின் விவரம், காய்ச்சல் முகாம், ஆக்ஸிஜன் அளவு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், கோவிட் சிகிச்சை மையங்கள், மருத்துவ சிகிச்சைகள் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
கோவிட் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து சிகிச்சை அளிக்கவும், தேவைக்கேற்ப கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தவும், கோவிட் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்யவும்,
பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கோவிட் தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் முறையாக பின்பற்றுவதைக் கண்காணிக்க வேண்டுமென தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஷம்பு கல்லோலிகர்.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர்
பெ.வே.சரவணன், மாவட்ட ஊரக வளா;ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.சந்தோஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி, இணை இயக்குநர் (ஊரக
நலப்பணிகள்) ராமு, பொது சுகாதார துணை
இயக்குநர்கள் கலைவாணி, விஜயக்குமார், நகராட்சி பொறியாளர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.