06/May/2020 09:25:26
பொது ஊரடங்கு அமலில் உள்ள வரை மக்களின் நலன் கருதி ஊராட்சியில் மதுக்கடையை திறக்க வேண்டாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு வடகாடு ஊராட்சித் தலைவர் எஸ் மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால்,மக்கள் வாழ்வாதாரம் இன்றி வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இந்நிலையில் மே. 7-ம் தேதி முதல் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது.இந்நிலையில்,பொது ஊரடங்கு அமலில் உள்ள வரை வடகாடு ஊராட்சியில் மதுக்கடையை திறக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியருக்கு ஊராட்சித் தலைவர் எஸ்.மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் அளித்துள்ள கோரிக்கை மனுவில்
: வடகாடு ஊராட்சியை சுற்றி சுமார் 5 கி.மீ சுற்றளவில் மதுக்கடை இல்லை.அதனால்,பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வசிப்பிட பகுதிக்கு அருகில் இருக்கும் வடகாடு மதுக்கடைக்கு ஏராளமானோர் வருவதற்கு வாய்ப்புள்ளது.அதனால், கொரோனா தொற்று பரவும் ஆபத்து உள்ளது.எனவே,வடகாட்டில் உள்ள மதுக்கடையை பொது ஊரடங்கு அமலில் உள்ள வரை திறக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளார்.