logo
காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே விற்பனை: ஈரோட்டிலுள்ள டாஸ்மாக்கடைகளில் மது வகைகளை அள்ளிச்சென்ற மது பிரியர்கள்

காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே விற்பனை: ஈரோட்டிலுள்ள டாஸ்மாக்கடைகளில் மது வகைகளை அள்ளிச்சென்ற மது பிரியர்கள்

06/May/2021 12:33:37

ஈரோடு, மே: காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே விற்பனை என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் இருந்த பல்வேறு வகையான மது வகைகளை  மது பிரியர்கள் அள்ளிச் சென்றனர்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் நேற்றைய தினசரி பாதிப்பு இதுவரை இல்லாத அளவாக 23 ஆயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இதுபோல் டாஸ்மாக் கடைகளிலும்  பார்களை மூடுவது உள்ளிட்ட  கட்டுப்பாடுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தன. இதன்படி டாஸ்மாக் பார்களில் அமர்ந்து மது குடிக்க அனுமதி மறுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 214 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 128 பார்கள் செயல்பட்டு வந்தன. பார்கள் இயங்க தடை விதிக்கப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 128 பார்களும் மூடப்பட்டன.

 

இதுபோல் பகல் 12மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கட்டுப்பாடுகள் காரணமாக இரவு 9 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதைக் கடை பிடித்து விற்பனை நடைபெற்று வந்தது. டாஸ்மாக் கடைகளில் சாதாரண நாட்களில் ரூ 5 கோடி வரையும், பண்டிகை  காலங்களில் ரூ.10 கோடி வரை விற்பனையாகி வந்தது.

ந்நிலையில், மே.6 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததன் அடிப்படையில்  டாஸ்மாக் கடை  காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி வியாழக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் காலை 8 மணிக்கு திறக்கப்பட்டன. பகல் 12 மணி வரை 4 மணி நேரம் மட்டுமே செயல்பட்டது.

இதனால் மது பிரியர்கள்  இன்று காலை 8 மணி முதலே டாஸ்மாக் கடைக்கு வந்து தேவையான மது வகைகளை அள்ளிச் சென்றனர். டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் போடப்பட்டிருந்தது. அந்த வட்டத்தில் நின்று மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கி சென்றனர். மேலும் தடுப்புக்கட்டைகளும்  அமைக்கப்பட்டிருந்தன.

Top