27/Jun/2021 08:56:15
ஈரோடு, ஜூன்: ஈரோட்டில் இறைச்சி -மீன்கடைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது.பாதிப்பு
அதிகம் உள்ள மாவட்டங்களில் ஈரோடு மாவட்டம் 2-ஆம் இடத்தில் உள்ளது. இதனால் நாளை முதல் வரும் ஜூலை 5-ஆம் தேதி வரை மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மீன் மார்க்கெட்டுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மாறாக தனித் தனியாக இயங்கும் இறைச்சி கடைகள் ,மீன்
கடைகள் இயங்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் மீன் கடைகள், இறைச்சி கடைகளுக்கு
சில கட்டுப்பாடுகளுடன்
காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கி வருகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளில் வழக்கத்தை
விட கூட்டம் அதிகமாக இருக்கும்.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமை மீன் கடை, இறைச்சிக் கடைகளில் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள சூரம்பட்டி கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், சூளை, ரங்கம்பாளையம் கொல்லம்பாளையம் போன்ற பகுதியில் உள்ள மீன் கடைகள், மட்டன் கடைகள், இறைச்சிக் கடைகளில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து வட்டத்தில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர்.
கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் கடைகளில் இன்று வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மீன் வாங்க வந்த பொதுமக்களிடம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை கூறினார். மேலும் மாநகராட்சி சார்பில் அலுவலர்கள் ஆங்காங்கே மீன் கடைகள், இறைச்சிக் கடைகளில் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவது குறித்து கண்காணித்தனர்.