logo
அதிசய சொம்பு என மோசடி செய்து  விவசாயிடம் பணம் பறிக்க முயற்சித்த நபர் கைது

அதிசய சொம்பு என மோசடி செய்து விவசாயிடம் பணம் பறிக்க முயற்சித்த நபர் கைது

29/Apr/2021 04:29:07

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெம்பநாயக்கன்பாளையத்தில் அதிசய சொம்பு எனக்கூறி  தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிடம் மோசடி செய்து பணம் பறிக்க முயன்ற நபரை பங்களாபுதூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு திருமலைவாடி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (29). விவசாயம் செய்து வருகிறார்.  கடந்த செவ்வாய்க்கிழமை அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ராமச்சந்திரன் வீட்டிற்குச் சென்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கே.என்.பாளையத்தை சேர்ந்த கணேசன் என்பவரிடம் அதிசய சொம்பு ஒன்று உள்ளதாகவும் அந்த சொம்பு அருகே டார்ச் லைட் ஆன் செய்து கொண்டு சென்றால் தானாக லைட் ஆப் ஆகி விடும்.  எனவே  அதிசய சக்தியுள்ள அந்த சொம்பை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.

இதில் ஆர்வமடைந்த ராமச்சந்திரன் அதிசய சொம்பை பார்க்க தனது நண்பர்களான முனிரத்தினம், சென்றாயன்  சிவாஜி ஆகியோருடன் தனது காரில் சென்றுள்ளார். கணேசன் இவர்களைக் கண்டதும் சொம்பை காட்டி அதற்கு விலையாக 1.50 கூறியுள்ளார்.

இதில் திருப்தியடையாத ராமச்சந்திரன் அந்த சொம்பை வேண்டாம் எனக்கூறி விட்டு கிளம்பியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த கணேசன் சொம்பை வாங்காமல் சென்றால் காரை ஏற்றிக் கொலை செய்து விடுவதாக மிரட்டினாராம்.

இதில் பயந்துபோன ராமச்சந்திரன் பங்களாபுதூர் காவல் நிலையத்தில் அளித்த  புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அத்திக்கவுண்டன் புதூர் அருகே  கணேசன் பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து ஏமாற்ற பயன்படுத்திய சொம்பு மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்கைது செய்யப்பட்ட கணேசனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Top