23/Apr/2021 06:01:26
ஈரோடு, ஏப்: ரௌடிகளின் அச்சுறுத்தலை கட்டுப்படுத்தக்கோரி மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு திரண்டு வந்து பொது மக்கள் மனு அளித்தனர்.
எங்கள் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு கடந்த சில வருடங்களாக ஒரு சில நபர்களால் அச்சுறுத்தல்கள் இருந்து வந்தது. நாளுக்கு நாள் அவர்களின் தொந்தரவு அதிகரித்து வந்ததால் ஈரோடு பழைய கரூர் ரோடு மக்கள் நலச் சங்கம் உருவாக்கி இதன் மூலம் எங்கள் பகுதி மக்களை அச்சுறுத்தி வந்த நபர்களை காவல்துறை உதவியுடன் சிறையில் அடைத்தோம்.
தற்போது அந்த நபர்கள் சங்க நிர்வாகிகளையும் பொதுமக்களையும் ஆள் வைத்து மிரட்டுகிறார்கள். அவர்கள் திருடிய பொருட்களை எங்களிடம் கொடுத்ததாக பொய் குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். இதனால் எங்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. அந்த நபர்கள் தொடர்ந்து எங்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி எங்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இப்பிரச்னையில் தலையிட்டு அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.