17/Apr/2021 12:37:49
புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏப்.14 முதல் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி திருவிழாவின் ஒரு பகுதியாக புதுக்கோட்டை உழவர் சந்தையில் நடைபெற்ற முகாமில் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டனர்.
தமிழகத்தில் அதிவேகமாக பரவி வரும் இரண்டாவது அலையை தடுக்கும் வகையில் தமிழக அரசு தடுப்பூசி திருவிழாவை நடத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை உழவர்சந்தையில் புதுக்கோட்டை நகராட்சி மற்றும் தமிழக சுகாதாரத்துறை சார்பில் சனிக்கிழமை தடுப்பூசி திருவிழா நடைபெற்றது.
இதில் உழவர் சந்தையில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து தொண்டு தங்களுடைய ஆதார் அட்டையை காண்பித்து மருத்துவ பரிசோத னை செய்து கொண்டனர். இதையடுத்து அனைவருக்கும் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டனர்.
மேலும் அங்கு வந்தவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில், நகராட்சி பொறியாளர் ஜீவாதசுப்பிரமணியன், நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு மேற்பார்வையிட்டனர்