logo
கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஈரோட்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட் செயல்பட தடை

கொரோனா தடுப்பு நடவடிக்கை: ஈரோட்டில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட் செயல்பட தடை

09/Apr/2021 11:07:21

ஈரோடு, ஏப்: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக  ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மீன் மார்க்கெட் செயல்பட தடைவிதிக்கப்படுவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


 

ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.கொரனோ பரவலை தடுக்க நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. கட்டுப்பாடுகளை அமல்படுத்துவது குறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர்  மா. இளங்கோவன் தலைமையில்  மாநகராட்சி கூட்ட அரங்கில் வணிகர்கள் பங்கேற்ற கூட்டம்  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன் பேசியதாவது: கொரனோ தடுப்பு நடவடிக்கையாக இனி வாரம் தோறும்  ஞாயிற்று கிழமைகளில் மீன் மார்க்கெட் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இறைச்சி கடைகளில் இறைச்சிகளை பாக்கெட் செய்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.தேநீர் கடைகளில் ஒரு முறை உபயோகிக்கும் பேப்பர் கப்மட்டுமே பயன்படுத்த வேண்டும்.திரையரங்குகள் உணவகங்களில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.  

கொரனோ தடுப்பூசி போட 50 நபர்களுக்கு மேல் பதிவு செய்தால் அவர்களின் இடத்திற்கே வந்து மாநகராட்சி சார்பில் தடுப்பூசி போடப்படும். கொரனோ விதிகளை மீறினால் முதல் முறை அபராதம் விதிக்கப்படும், இரண்டாவது முறை கடை சீல் வைக்கப்படும்.

முக கவசம் அணியாதவர்களுக்கு 100 ரூபாயாக இருந்த அபராதம் 200 ரூபாயாகவும், எச்சில் துப்பினால் 500 ரூபாய், சமூக இடைவெளி பின்பற்றாதவர்களுக்கு 500 ரூபாய், வணிக நிறுவ னங்கள், வாகனங்களுக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இது தொடர்பாகபுதிய உத்தரவு அரசிடம் இருந்து வந்துள்ளது. 

வணிக நிறுவனங்களுக்கு வந்து செல்பவர்களின் செல்போன் எண், பெயர் பதிவு செய்ய வேண்டும். ஒரே தெருவில் 3 வீடுகளுக்கு மேல் கொரனோ தொற்றாளர்கள் இருந்தால் அந்த பகுதி கன்டெய்ன்மென்ட் பகுதியாக அறிவித்து அடைக்கப்படும் என்றார் அவர்.

Top