logo
 ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காத எம்எல்ஏவை பார்க்க வேண்டுமானல் எம்.சின்னத்துரையை தேர்ந்தெடுங்கள்: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்பி பேச்சு.

ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காத எம்எல்ஏவை பார்க்க வேண்டுமானல் எம்.சின்னத்துரையை தேர்ந்தெடுங்கள்: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்பி பேச்சு.

27/Mar/2021 12:12:15

புதுக்கோட்டை, மார்ச்:  எந்தச் சூழலிலும் ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்காத எம்எல்ஏவை நீங்கள் பார்க்க விரும்பினார் சிபிஎம் வேட்பாளர் எம்.சின்னத்துரைக்கு வாக்களியுங்கள் என்றார் முன்னாள் மத்திய அமைச்சரும், தஞ்சை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.


திமுக கூட்டணியில் கந்தர்வகோட்டை தொகுதி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிடும் எம்.சின்னத்துரை வெள்ளிக்கிழமை குன்றாண்டார் கோவில் ஒன்றியதில் வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். கிள்ளனூரில் பிரசாரப் பயணத்தை தொடங்கி வைத்து அவர் பேசியது:

கிராமப்புற மாணவர்கள் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக சத்துணவுடன் முட்டை, இலவச பேருந்து பயண அட்டை திமுக ஆட்சியல் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர்களாக இருந்தபோது நானும், ப.சிதம்பரமும் மாணவர்களுக்கு கல்விக்கடன் திட்டத்தை கொண்டுவந்தோம். எடப்பாடி அரசு ஆடு, மாடு, கோழி வழங்கும் திட்டத்தை கொண்டு வருகிறது. அதாவது, நம் வீட்டுப்பிள்கைளைகளை படிக்கவிடாமல் விடுமுறை தினங்களில்; ஆடுமேய்க்க அனுப்பும் சதி இதில் இருக்கிறது.


இடதுசாரிகளின் ஆதரவோடு திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் நூறுநாள் வேலைத்திட்டம்  கொண்டுவரப்பட்டது. ஏழைமக்களும் அன்றாடம் நாட்டுநடப்புகள் தெரிய வேண்டுமென்பதற்காக கலைஞர் இலவச டிவி கொடுத்தார். இத்தனை வருடங்கள் கழித்தும் டிவி ஒடுகிறது. இவர்கள் கொடுத்த மிக்கி, மின்விசிறி எல்லாம் தினந்தோறும் பழைய இரும்புக் கடைகளுக்குச் செல்கிறது. பெட்ரோல், டீசலுக்குப் போட்டு மத்திய அரசு ஓடுகிறது. டாஸ்மாக் கடை மூலமாக மாநில அரசு ஓடுகிறது. இரண்டு அரசுகளுமே மக்களிடம் கொள்ளையடித்துத்தான் நடக்கிறது. 


திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 தரப்படும், கரும்ப டன்னுக்கு ரூ.4000 தரப்படும், சுய உதவிக்குழுக்கடன் தள்ளுபடி வழங்க உள்ளது. கடைசி நேரத்தில் இவர்கள் அறிவித்த கூட்டுறவுக் கடன்களைக்கூட மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகுதான் உண்மையாகவே தள்ளுபடி செய்யப்பட உள்ளது. 

கந்தர்வகோட்டை தொகுதியிலிருந்து அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் ஊருக்குள் இருந்த பேருந்துநிலையத்தை சம்பந்தமே இல்லாத சுடுகாட்டுக்கு மாற்றினார். மக்களின் எதிர்ப்பால் மீண்டும் பழைய இடத்திலேயே பேருந்து நிலையம் தொடர்கிறது. சுடுகாட்டில் கட்டிய கட்டிடத்தில் கருமாதிதான் நடக்கிறது. கடந்த முறை எம்ஏல்ஏவாக இருந்த ஆறுமுகம் தொகுதிப் பக்கமே எட்டிப்பார்க்கவே இல்லை. 

திமுக கூட்டணியில் போட்டியிடும் எம்.சின்னத்துரை மிக எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். அகில இந்திய அளவில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் கடமையில் ஈடுபட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்தான் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். இவர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கட்டியிருக்கும் வேட்டி, சட்டையைத் தவிர வேறு சொத்துகள் எதுவும் இல்லை எனக் குறிபிட்டுள்ளார். இவர் மனைவி இன்னும் நூறுநாள் வேலைக்குச் சென்றுகொண்டு இருக்கிறார். 

நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதத்தைத் தருகிறேன். சின்னத்துரை வெற்றிபெற்றால் தற்பொழுது எந்த நிலையில் இருக்கிறாரோ 5 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நிலையில்தான் இருப்பார். மாற்றம் இருக்காது. எந்நேரமும் தொகுதி மக்களோடு, கிடந்து உழைப்பார். ஒரு ரூபாய்கூட லஞ்சம் வாங்கமாட்டார். இந்தப் பகுதிக்கு பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருவதற்கு சின்னத்துரைக்கு நானும் உறுதுணையாக இருப்பேன். முன்னுதாரணமான சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

 வேட்பாளருடன் திமுக மாவட்ட பொருப்பாளர்  கே.கே.செல்லப்பாண்டின், முன்னாள் எம்எல்ஏ ரா.சு.கவிதைப்பித்தன், ஒன்றியக்குழுத் தலைவர் போஸ், முன்னாள் ஒன்றியப் பெருந்தலை வர்  ரெங்கராஜ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Top