21/Mar/2021 09:08:17
ஈரோடு, மார்ச்: ஈரோடு மேற்கு தொகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் மேற்கொள் வேன் என வாக்குறுதி அளித்தார் திமுக வேட்பாளர் சு.முத்துசாமி.
ஈரோடு மேற்கு தொகுதியில் திண்டல், வள்ளிபுரத்தான்பாளையம், நத்தகாட்டுபாளையம், பாரவலசு பகுதி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து வாக்காளர்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்துக்கு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்பகுதி மக்களிடம் சு.முத்துசாமி பேசியதாவது: இப்பகுதியில் குடிநீர், சாலை, கழிவு நீர் ஓடை சீரமைப்பு, கழிவு நீர் செல்லும் வாறுகால், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தருவேன். கடந்த, பத்து ஆண்டாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, இப்பிரச்னைகளை கண்டு கொள்ளவில்லை. மக்களின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்து திமுக ஆட்சி அமைத்ததும் முதல், 100 நாளில் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும்.
மேற்கு தொகுதி மக்கள் என்னை எளிதில் அணுகும் வகையில், அலுவலகம் அமைத்து குறைகளுக்கு தீர்வு காணப்படும். குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை, மக்கள் சந்திப்பு நடத்தி, குறைகள், கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்படும். இப்பகுதியில் வீடு இல்லாத மக்களுக்கு வீடு அல்லது வீட்டுமனை பட்டா கிடைக்க முயற்சி மேற்கொள்வோம்.
திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும், மேற்கு தொகுதி மக்களுக்கு முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மேம்பாலம், தேவையான இடங்களில் அணுகு சாலைகள் அமைக்க திட்டம் வகுக்கப்படும்.
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மேற்கு தொகுதி மக்கள், உதய சூரியன் சின்னத்தில் ஓட்டுப்போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும். இதன் மூலம் அமையும் திமுக ஆட்சி மூலம் இத்தொகுதி மக்களுக்கான அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என்றார்.
இதையடுத்து அரவிளக்கு, மேட்டுப்பாளையம், புங்கம்பாடி, மேட்டுப்பாளையம், கவுண்டச்சிபாளையம், கள்ளுக்கடைமேடு, வெள்ளோடு ரவுண்டானா என பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.