18/Feb/2021 05:42:23
ஈரோடு, பிப்: கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள பிரபலமான கோயிகளுக்கு பக்தர்கள் வழிபாடு நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தேவஸ்தானம் சார்பில் பஞ்சாமிர்த பிரசாதத்தை தபால் மூலம் பக்தர்களுக்கு வீடு தேடி வழங்க தபால் துறையுடன் பழனி தேவஸ்தானம் ஒப்பந்தம் செய்துள்ளது.அதில் அரை கிலோ பஞ்சாமிர்தம், விபூதி பாக்கெட், முருகனின் ராஜ அலங்கார உருவப்படம் அடங்கிய பார்சல் வழங்கப்படுகிறது.
தற்போது இந்த திட்டம் ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பழனி முருகனின் பிரசாதம் பெற விரும்பும் பக்தர்கள் ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து ரூ .250 -செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். பிரசாத பொருட்கள் அடங்கிய பார்சல் விரைவு தபால் மூலம் வீட்டுக்கு வந்துவிடும் என தபால் நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேலும் ஆதார் அட்டையானது அனைத்து சேவைகளுக்கும் தற்போது தேவைப்படுவதால் பலர் புதிதாக ஆதார் அட்டை எடுக்கவும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்யவும் நேரம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர்.பொதுமக்கள் சிரமத்தை போக்கும் வகையில் ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து ஆதார் சேவைக்காக பிரத்யேக சிறப்பு மையம் செயல்பட்டு வருகிறது .பொதுமக்கள் இந்த சேவை மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.