26/Mar/2021 11:17:40
ஈரோடு, மார்ச்:அரசு ஊதியத்தைத் தவிர வேறு எதையும் வாங்க மாட்டேன் என வாக்காளர்களிடம் ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா உறுதியளித்தார்.
முக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருமகன் ஈவெரா, ஈரோடு மணிக்கூண்டு, ஈ.வி.என் சாலை, மஜித் வீதி உள்ளிட்ட நகரப்பகுதிகளுக்கு நேரில் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
அப்பகுதி மக்களிடம், வேட்பாளர் திருமகன் ஈவெரா பேசியதாவது: ஈரோடு கிழக்கு தொகுதி வளர்ச்சிக்காக எனது முழு நேரத்தையும் செலவிட்டு பாடுபடுவேன். இத்தொகுதி மக்கள் என்னை எந்த நேரமும் எளிதில் அணுகும் வகையில் அலுவலகம் அமைத்து செயல்படுவேன். உங்களால் நான் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானால் அரசு வழங்கும் ஊதியம் தவிர, வேறு எந்த வகையிலும் எதற்காகவும் பணம் வாங்க மாட்டேன்.
இத்தொகுதியில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து, சமூக விரோத செயல்கள் தடுக்கப்படும். பெண்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும். மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து தீர்வு காண்பேன்.
எனது தந்தை எம்.பி. யாக மத்திய அமைச்சராக இருந்தபோது, நேர்மையாக செயல்பட்டதை மக்கள் அறிவார்கள். பல திட்டங்களை செயல்படுத்தினார். அதுபோல, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள், மக்களின் கோரிக்கைள் விரைவாக நிறைவேற்ற பாடுபடுவேன். குறிப்பாக, மாநகராட்சி மண்டலம் வாரியாக மாதம் ஒரு முறை அதிகாரிகளுடன் மக்களை சந்தித்து குறைகள் கேட்பேன். வீட்டு வரி, சொத்து வரி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார் திருமகன் ஈவெரா.