26/Mar/2021 12:22:45
புதுக்கோட்டை, மார்ச்: ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக திமுகவினர் எதையும் பேசுவார்கள் எதையும் செய்வார்கள், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றார் அதிமுக நிர்வாகி நடிகை விந்தியா.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சி. விஜயபாஸ்கர், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வீ.ஆர்.கார்த்திக் தொண்டைமான் மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பி.கே.வைரமுத்து ஆகியோரை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா வியாழக்கிழமை இரவு நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் பேசியதாவது:
திருமயம் தொகுதிக்கு உள்பட்ட அரிமழத்தில் வேட்பாளர் வைரமுத்து ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை விந்தியா பேசியதாவது: தமிழக மக்கள் திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சர் நாற்காலியில் உட்கார விடமாட்டார்கள். கருணாநிதியே ஸ்டாலினை நம்பாமல் தான் முதலமைச்சர் பதவியை அவருக்கு வழங்கவில்லை.
தற்போது அவரது மகன் உதயநிதி, தனது தந்தை ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவேன் என்று கூறி வருகிறார். ஆனால் ஸ்டாலினின் அப்பா கருணாநிதியே மீண்டும் பிறந்து வந்தாலும் அது முடியாது. தமிழகத்தை ஆளத்தகுதி கிடையாது என்பதால்தான் திமுகவை கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் ஒதுக்கி வைத்தனர். மக்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்காக திமுகவினர் எதையும் பேசுவார்கள் எதையும் செய்வார்கள் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் , கச்சத்தீவு பிரச்னை காவேரி பிரச்னை இலங்கை தமிழர் பிரச்னை மீத்தேன் பிரச்னை போன்ற ஆகிய எண்ணற்ற பிரச்னைகள் ஏற்பட்டது. திமுகவினர் எப்போதும் மக்களை நம்பி தேர்தலை சந்திக்க மாட்டார்கள். விளம்பரத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திப்பார்கள். தேர்தல் நேரத்தில் தி முக ஸ்டாலின் நாட்டாமை வேஷம், மாணவன் வேஷம், மீனவன் வேஷம், பாட்டாளி வேஷம், பங்காளி வேஷம், சைக்கிள் ஓட்டுவது, ஆட்டோ ஓட்டுவது, பஸ் ஓட்டுவது முடிந்தால் பூசாரி வேஷம் போட்டுகிட்டு பேய்கூட ஓட்டுவார் தேர்தல் நேரத்தில் தி முக தலைவர் ஸ்டாலின் போன்ற பல்வேறு வேஷங்களைப் போட்டுக்கொண்டு பிரசாரம் செய்கிறார். அதை நம்பி மக்கள் ஏமாந்து விடக்கூடாது.
அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பல திட்டங்களைக் கொண்டு வந்தனர். மேலும் பல திட்டங்களை தற்போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் வெற்றி நடைபோடும் தமிழகம் வீர நடை போடும் தமிழகமாக மாற மக்கள் அதிமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றார் நடிகை விந்தியா.