24/Mar/2021 07:22:56
புதுக்கோட்டை, மார்ச்: திருமயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பி.கே. வைரமுத்து ஒரே நாளில் 63 கிராமங்களில் வாக்கு சேகரித்து வாக்காளர்களிடம் பிரசாரம் மேற்கொண்டார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தலைவரும், திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளருமான பி,.கே. வைரமுத்து 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் களம் காண்கிறார். வெகுமக்களின் செல்வாக்கைப்பெற்றுள்ள இவர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருமயம் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதி, அரிமளம், திருமயம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள 33 ஊராட்சிகளை 200 -க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் கடந்த 22 -ஆம் தேதியிலிருந்து தனது பிரசாரத்தை தொடங்கினார்.
இந்நிலையில், பொன்னமராவதி, திருமயம் ஒன்றியத்துக்குள்பட்ட ஒலியமங்கலம், காயாம்பட்டி, சேர்வைக்காரன்பட்டி, எம். உசிலம்பட்டி, மேலத்தாணியம், முள்ளிப்பட்டி, கீழத்தாணியம், ஆலம்பட்டி, கன்னியாபட்டி, கைவேலிப்பட்டி, சேரனூர், நெரிஞ்சிக்குடி, நல்லூர், சித்தூர், கூடலூர் உள்பட 63 கிராமங்களில் ஒரே நாளில் சுற்றுப்பயணம் செய்து அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர மீண்டும் அதிமுக அரசை பதவியில் அமர வைக்க வேண்டும்.
மேலும், திருமயம் தொகுதியில் அதிமுக வேட்பாளரான தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியாக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என பி.கே. வைரமுத்து பேசி வாக்கு சேகரித்தார்.
முன்னதாக, அரிமளம் ஒன்றியம், மிரட்டுநிலையில் பிரசாரம் செய்தார். இதில், அதிமுக நிர்வாகிகள் பழனியாண்டி, பழ. ராஜேந்திரன், பழனிசாமி,, சந்திரன், முருகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.