logo
முதல்வராக பழனிசாமி பொறுபேற்றால் மகிழ்ச்சி:பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் பேட்டி

முதல்வராக பழனிசாமி பொறுபேற்றால் மகிழ்ச்சி:பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் பேட்டி

19/Mar/2021 10:39:00

ஈரோடு, மார்ச்: சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று  எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றால், மகிழ்ச்சியடையும் முதல் ஆளாக நானாகத்தான் இருப்பேன் என்றார் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம்.

 ஈரோடு மாவட்டம் ,பெருந்துறை தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலத் திற்கு இந்தத் தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு அளிக்கவில்லை. இதையடுத்து, அவர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து  வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், தோப்பு வெங்கடாசலத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக அதிமுக தலைமை  நடவடிக்கை எடுத்தது. 

 இந்த அறிவிப்பிற்குப்பின் பெருந்துறையில் செய்தியாளர்களிடம் தோப்பு வெங்கடாசலம்  கூறியதாவது: அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட காரணத்திற்காக என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்கள். கடந்த  6  மாதத்திற்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில், இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து சுயேட்சையாகப் போட்டியிட்டவர், தற்போது பெருந்துறை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட அவர் மீது முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. கட்சித்தலைமை பாரபட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளது.  இது ஜெயலலிதாவின் ஆன்மாவிற்கு எதிரானது.  கடந்த 40 ஆண்டுகாலமாக, மாணவர் பருவத்தில் இருந்து அதிமுகவில்  பணியாற்றி முன்னேறினேன். கட்சியிலிருந்து என்னை நீக்கியதற்காக முதல்வரையோ, துணைமுதல்வரையோ குறை சொல்ல மனமில்லை. அமைச்சர்கள் செங்கோட்டையன் , கருப்பண்ணன் ஆகிய இருவரும் முதல்வருக்கு கடும் நெருக்கடி கொடுத்ததால்தான் என்னை நீக்கியுள்ளனர். இந்த தேர்தலில் அமைச்சர்களின் விசுவாசிகளுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

தற்போதைய முதல்வர், துணை முதல்வரின் அனுபவத்தோடு ஒப்பிடுகையில், நான் கடைக்கோடியில் உள்ள சாதாரண தொண்டன்.  எனது நியாயத்தை, ஆதங்கத்தை உங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளேன். தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக கட்சியில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன். 

ஆனால், முதல்வராக பழனிசாமியை நான் ஏற்றுக் கொள்வேன். முதல்வராக பழனிசாமி பொறுப்பேற்றால், மகிழ்ச்சியடையும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். பெருந்துறைத் தொகுதியில் ஜெயலலிதாவின் ஆசியோடு நான் வெற்றி பெறுவேன்.  பெருந்துறை நான்கு வழிச்சாலை சந்திப்பில் விபத்துகளைத் தடுக்க மேம்பாலம் அமைக்கப்படும்.

கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை மூன்று மாத காலத்தில் செயல்படுத்துவேன். கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என முதல்வரை வலியுறுத்துவேன் என்றார்.


Top