19/Mar/2021 10:57:33
புதுக்கோட்டை, மார்ச்: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறைகளுக்கு கண்காணிப்பு கேமராவுடன் 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி.. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட் டுள்ள புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலக பாதுகாப்பு அறையினை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவருமான பி.உமாமகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபின் கூறியதாவது:
சட்டமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் மொத்தம் 1,902 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வழங்கும் வகையில் கணினி மூலம் முதல்கட்ட கலவை முறையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பிரித்து வழங்கும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் 10.3.2021 -இல் நடைபெற்றது. இதில், வாக்குப்பதிவு இயந்திரத்தின் 3,401 பேலட் யூனிட், 2,331 கண்ட்ரோல் யூனிட், 2,482 விவிபேட் இயந்திரங்களும் முதல்கட்ட சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்மந்தப்பட்ட தொகுதிக்குட்பட்ட கந்தர்வக்கோட்டை, இலுப்பூர், புதுக்கோட்டை, திருமயம் மற்றும் ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகங்களிலும், அறந்தாங்கி சார் ஆட்சியர் அலுவலகத்திலும் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா, 24 மணிநேரமும் ஆயுதம் ஏந்திய போலீஸார், தீயணைப் பான்கள், கண்காணிப்பு பதிவேடுகள் உள்ளிட்ட பல்வேறு உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்தஅறைகள் இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையில் பூட்டி சீல் வைக்கப்பட் டுள்ளது.இந்த அறைகளின் பாதுகாப்பு நிலைமை குறித்து அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜிசரவணன், வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார், வட்டாட்சியர் முருகப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்