31/Oct/2020 11:58:43
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள உக்கரம் கொத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஸ். இவரது மனைவி ரஞ்சிதா(22). நிறைமாத கர்ப்பிணியான ரஞ்சிதா உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதந்தோறும் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஞ்சிதாவுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து உக்கரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
அவருக்கு பனிக்குடம் உடைந்ததில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது மூலக்கிணறு என்ற இடத்தில் ஆம்புலன்ஸ் சென்ற போது ரஞ்சிதாவுக்கு கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து அவசர மருத்துவ உதவியாளர் ஜெயஸ்ரீ, பைலட் வரதராஜன் ஆகியோர் பிரசவம் பார்த்தனர். இதில் ரஞ்சிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் தாய்,சேய் இருவரையும் கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.