16/Mar/2021 05:22:32
ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் முதலில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக மாவட்டத்தில் நோய்த்தொற்று குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக நோய் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 10-க்கும் குறைவாகவே இருந்தது. தற்போது 19 ஆக உயர்ந்தது.
சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப் பட்டியல்படி, மாவட்டத்தில் மேலும் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 999ஆக உயர்ந்தது.இன்று இரவுக்குள் 15 ஆயிரத்தை நெருங்கி விடும்.
ஒரே நாளில் 10 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 723 ஆக உயர்ந்தது.கொரோனாவால் மாவட்டத்தில் இதுவரை 150 பேர் உயிரிழந்துள்ளனர்.தற்போது மாவட்டம் முழுவதும் 123 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை யும் உயர தொடங்கியுள்ளது.
தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வெளியே வரவேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.