20/Feb/2021 09:26:41
புதுக்கோட்டை, பிப்: புதுக்கோட்டை அருகே திருவப்பூரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் மாசிபெருந்திருவிழா பூச்சொரிதல் விழா(21.2.2021)வுடன் நாளை தொடங்குகிறது.
இதையொட்டி அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது . பின்னர் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
இதேபோல பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், குழந்தைகள் இல்லாமல் இருந்து குழந்தை பிறந்த தம்பதிகள் கரும்பில் தொட்டில் கட்டி தங்களது குழந்தையை கோவிலுக்கு மேள தாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
பூச்சொரிதல் சிறப்பு வழிபாடு
திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில் நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஊர்வலமாக செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர்மோர் உள்ளிட்ட பானங்கள் வழங்குவது வழக்கம் .
இதைத்தொடர்ந்து இரவு புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்கள் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் பூக்களை கோவிலுக்கு முத்துமாரியம்மன்அலங்காரத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் பூச்சொரிதல் சிறப்பு வழிபாடுநடக்கும் . தொடர்ந்து (22.2.2021) திங்கட்கிழமை அதிகாலையில் பூ பிரிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
8.3.2021 -ஆம் தேதி தேரோட்டம்
இதைத்தொடர்ந்து வருகிற 8.3.2021 தேதி மாசி தேரோட்டம் நடைபெறுகிறது. அதனையொட்டி 28.2.2021 அன்று இரவு காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் முத்துமாரியம்மன் வீதிஉலா நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8 -ஆம் நாளான 7.3.2021 அன்று பொங்கலும் 9 -ஆம் நாளான 8.3.2021-ஆம் தேதி மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். மாசித்திருவிழா 16.3.2021 தேதியுடன் நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்