logo
கொரோனா பரவல்: முகக்கவசத்தின் அவசியம் குறித்து புதுக்கோட்டை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

கொரோனா பரவல்: முகக்கவசத்தின் அவசியம் குறித்து புதுக்கோட்டை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

16/Mar/2021 04:50:33

புதுக்கோட்டை, மார்ச்: முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து புதுக்கோட்டை நகராட்சியும், காவல்துறையும் இணைந்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த சில மாதங்களாக குறைந்திருந்தது. இந்த நிலையில் ஒரு சில இடங்களில் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்ந்த நிலையில் பெருமளவு பொதுமக்கள் முக கவசம் அணிவதை தவிர்த்துவிட்டனர். இதேபோல வணிக நிறுவனங்கள், கடைகள், மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், பஸ்களில் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பெருமளவு குறைந்துவிட்டன என்றே கூறலாம்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் இல்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். அருகிலுள்ள  தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஒரிரு நாட்களாக அதிகரித்துள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிதல், கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை கடைப் பிடித்தல் உள்ளிட்டவையை மீண்டும் தீவிரமாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்ததை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது   மேலும் முககவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பறக்கும் படை அமைக்கப்பட்டு வணிக நிறுவனங் களை கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையை முழுமையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

 புதுக்கோட்டை புதிய பேருந்து லையம் அருகே பொதுமக்களிடம் முககவசம் அணிவதன் அவசிய குறித்து  நகராட்சி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு  பிரசாரம் மேற்கொண்டனர். இதில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஜீவா சுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு, முக கவசம் அணியாமல் வந்தவர்களிடம் முககவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி அனைவருக்கு  முக கவசங்களை இலவசமாக வழங்கினர்.

மேலும், வீட்டை விட்டு வெளியே வரும் போது அடுத்த முறை முக கவசம் அணியாமல் வந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர். கொரோனா பரவல் மற்றும் தொற்று அதிகரிப்பைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

 


Top