logo
திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைவு

திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைவு

14/Mar/2021 01:23:50

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்(61) உடல்நலக் குறைவால் காலமானார்.

 சென்னையில் வசித்து வந்த அவர், தனது வீட்டில் சுயநினைவின்றி இருந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (மார்ச் 11) தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீவிர சிகிச்சைப்பிரிவில்  அவர் வைக்கப்பட்டிருந்தார்.

வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை  (மார்ச் 14) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்னும் பொதுவுடமை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய  எஸ்.பி.ஜனநாதன், ஜெயம் ரவி நடிப்பில் உருவான பூலோகம் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

மேலும், விஜய்சேதுபதி - ஸ்ருதி ஹாசன் நடிப்பில் லாபம் திரைப்படத்தையும் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியுள்ளார். படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து தற்போது அத்திரைப்படத்திற்கு பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இடதுசாரி சிந்தனை மற்றும் கொள்கைகளில் பிடிப்புடைய  இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தான் முதலாவதாக  இயக்கிய  இயற்கை  திரைப்படம் தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Top