logo
கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா பூச்சொரிதலுடன் இன்று தொடக்கம்

கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா பூச்சொரிதலுடன் இன்று தொடக்கம்

13/Mar/2021 07:44:20

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன்கோயில் பங்குனி பெருந்திருவிழா பூச்சொரிதலுடன் இன்று(மார்ச்.13)   தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கொன்னையூரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் முன்பு பெரும் காடாக இருந்தது, அப்போது இவ்வட்டாரத்தில் ஆலயம் ஏதும் இல்லாத நிலையில் இப்பகுதி மக்கள் அருகேயுள்ள வேகுப்பட்டி கிராமத்திலுள்ள  ஸ்ரீஏனமாரியம்மனை வழிபட்டு வந்தனர். அக்கோயிலுக்கு தரிசனம் செய்யவும், வியாபாரத்திற்காக பால் எடுத்து செல்கையில் தற்போது அம்பாள் வீற்றிருக்கும் இடத்தில் இருந்த கொன்னை மரத்தின் வேர் தடுக்கி பால் பூமியில் கொட்டும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வந்தது. மேலும் கிராமத்தினர் கொன்னை மரத்தடியில் அம்பாள் எழுந்தருளியுள்ளதாக அசரீரி வாக்கை கேட்டதாக கூறியவுடன் அனைவரும் ஒன்று கூடி கொன்னை மரத்தடியில் அம்மனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும் அதன் காரணமாகவே இத்தலம் கொன்னையூர் என அழைப்படுவதாகவும் தல வரலாறு கூறுகிறது.

 ஒவ்வொரு ஆண்டும் பங்குனித்திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறும் அதில் கொன்னையூரைச் சுற்றியுள்ள சுமார் 60 கிராமங்களிலிருந்து மின்னலங்கார பல்லக்குகளில் வாண வேடிக்கையுடன் புஷ்ப பவனியுடன் ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் பால்குடங்களுடன் வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து  நேர்த்திக்கடனையும், அதைத் தொடர்ந்து கோயில் முன் அமைக்கப்பட்ட அக்னி குண்டங்களில் பக்தர்கள் இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். 

ஏப்ரல்-6-இல் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையைட்டி திருவிழா தேதி மாற்றம்:

அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயிலில் திருவிழா வழக்ககம்போல் 14.3 2021 பூச்சொரிதலுடன் துவங்கி 21.3.2021 காப்புகட்டி 4.42027 பொங்கல் மற்றும் 5.4.2021 நாடுவரும் நிகழ்வு ஆகியவைகளுடன் 6.4.2021 நிறைவு பெற இருந்த நிலையில்,  6.4.2021 அன்று நடைபெற உள்ள  சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 4.4,2021  மாலை 5.00 மணிமுதல் ஊரடங்கு அமுலுக்கு வரும் என்பதால்,  7.3.2021 அன்று திருமயம் சட்ட மன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரால் மேற்படி திருவிழாவை வேறு தேதிக்கு மாற்றம் செய்ய அறிவுறுத்தியதால்  9.3.2021 காலை 11.00 மணியளவில் நாட்டார்கள் மற்றும் அனைத்து மண்டகப்படிதாரர்களையும் கலந்து ஆலோசித்து 13.3.2021 பூச்சொரிதல், 14.3.2021 அக்னிக்காவடி நடத்தி அன்று இரவு காப்பு கட்டி பின்கண்டவாறு மண்டகப்படிகள் நடத்தி 28.3.2021 பொங்கல் வைத்து 29.3.2021 திங்கட்கிழமை கோயிலுக்து பாத்தியப்பட்ட பொன்னமராவதி நாடு, செவலூர் நாடு, ஆலவயல் நாடு, செம்பூதி ஆகிய   நாடுவரும் நிகழ்வை நடத்திக்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. 

Top