12/Mar/2021 06:26:12
முக்குலத்தோர் சமுதாயத்தில் அடங்கியுள்ள அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவரை வேட்பாளாகத் தேர்வு செய்யுமாறு அதிமுக தலைமைக்கு கோரிக்கை வைத்து மதுரையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
2011 -ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த இரண்டு முறையும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது. 2011 -இல் ஏ.கே. போஸ் மற்றும் 2016 இல் ராஜன் செல்லப்பா ஆகியோர் வென்றுள்ளனர்.இருவருமே முக்குலத்தோர் சமுதாயத்தில் கள்ளர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2021 -சட்டமன்ற தேர்தலில் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன் செல்லப்பா போட்டியிட உள்ளதாகவும், மதுரை வடக்கு தொகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் போட்டியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சூழலில், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அகமுடையார் இளைஞர் பேரவை சார்பில் அதிமுக தலைமைக்கு கோரிக்கை வைத்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில், அதிமுக தலைமையே மதுரை மாநகர் மாவட்ட சட்டமன்ற தொகுதியில் அதிகம் வசிக்கும் அகமுடையார்(முக்குலத்தோர்) சமுதாயத்தை புறக்கணிக்க கூடாது, அகமுடையார் சமுதாயத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்றும், இறக்குமதி வேட்பாளரை விட மாட்டோம் என்ற வாசகங்கள் அடங்கியுள்ளன.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையிலும், இது போன்ற சுரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்திலும், மதுரை மக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.