09/Mar/2021 05:39:22
ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 5,349 முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் எதிரொலித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்தியாவில் முதற் கட்டமாக கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு கொரோனா தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
முதற்கட்டமாக அரசு ,த னியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு போடப்பட்டது. ஈரோடு மாவட்டம் முழுவதிலும் 5 அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 2 தனியார் மருத்துவ மனைகளிலும் கோவிஷீல்டு தடுப்பூசி முதல்கட்டமாக தனியார், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் நர்சுகளுக்கு போடப்பட்டது. இரண்டாவது கட்டமாக சுகாதார பணியாளர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், போலீசார், பிற துறையில் பணியாற்றும் முன் களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்ட நாள்பட்ட நோயாளிகள் (சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்) அனைவருக்கும் மார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 24 அரசு மையங்களிலும், 42 தனியார் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயது முதல் 59 வயதுவரை உள்ள(சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக சம்பந்தப்பட்ட நோய்) நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் இருந்து 59 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட ரூ.250 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. மார்ச்1 -ஆம் தேதி முதல் செவ்வாய்க்கிழமை வரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 5, 349 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளொன்றுக்கு 66 மையங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் பணி நடைபெற்று வருகிறது.