logo
ஈரோடு மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாதவர்களுக்கு  அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியது

ஈரோடு மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடங்கியது

09/Mar/2021 05:25:54

ஈரோடு, மார்ச்: ஈரோடு மாவட்டம் முழுவதும் முக கவசம் அணியாதவர்களுக்கு  அபராதம் விதிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று  மாவட்ட நிர்வாகம் எச்சரித்திருந்தது.


 ஆனால் இதை பெரும்பாலான மக்கள் கடைப்பிடிக்கவில்லை. இதையடுத்து மூக கவசம் அணியாமல் வந்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதையும் பெரும்பாலான மக்கள் கண்டு  கொள்ளவில்லை.  மாவட்டத்தில் கொரோனா தாக்கம்  மீண்டும் அதிகரித்தது. இதையடுத்து  மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும். இல்லை என்றால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

 இதையடுத்து மாவட்டம் முழுவதும் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர் கள்,  சுகாதார ஆய்வாளர்கள், வருவாய்த்துறையினர் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு முக கவசம் அணிந்து வராதவர்களுக்கு  ரூ. 200 அபராதம் விதித்தனர். மாவட்டம் முழுவதும் தினசரி சராசரியாக 200 பேருக்கு அபராதம் விதித்து வந்தனர். 

இதையடுத்து பொதுமக்களிடம் முக கவசம் அணியும் பழக்கம் அதிகரித்தது. நூற்றுக்குத் தொண்ணூறு சதவீதம் பேர் முக கவசம் அணிய தொடங்கினர். இதனால் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியது. நோய்த் தொற்றில் இருந்து ஆயிரக்கணக் கானோர் குணமடைந்தனர்.மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வந்தது. இதையடுத்து ஈரோட்டில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு  அபராதம் விதிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் முக கவசம் அணியும் பழக்கம் குறைய தொடங்கியுள்ளது. அதைப்போன்று பொது இடங்களில் சமூக இடைவெளி  கேள்விக்குறியாகி உள்ளது. 

தற்போது கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் மீண்டும் தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலும் முக கவசம் அணியும் பழக்கம் முற்றிலும் குறைந்து உள்ளது. கொரோனா பற்றிய அச்சம் மக்களிடம் இல்லை. இதையடுத்து, மார்ச் 9 முதல்  மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர உத்தரவிட்டார்..

இதையடுத்து   ஈரோடு மாவட்டம் முழுவதும் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள், போலீஸார், வருவாய்த் துறையினர், சுகாதாரத் துறையினர் ஒன்றிணைந்து பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு ரூ .200 அபராதம் விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

Top