logo
ஈரோடு அருகே காவலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

ஈரோடு அருகே காவலாளி கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

02/Mar/2021 07:12:27

ஈரோடு, மார்ச்: ஈரோடு அருகே காவலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு அடுத்த வெண்டிபாளையம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மகன் மவுலி (25). இவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி முதல் மவுலி திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் மொடக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து மாயமான மவுலியை  கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.  தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில்மவுலி உடல் சோலார்புதூர் அடுத்த காலிங்கராயன் வாய்க்காலில் அழுகிய நிலையில்  திங்கள்கிழமை கிடந்தது. அவர்  அடித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில் மவுலியை கொலை செய்ததாக வெண்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி  பத்மநாபனிடம் டாஸ்மாக் பார் உரிமையாளர் சரவணன் (53) என்பவர் சரணடைந்தார். பின்னர் அவர் மொடக்குறிச்சி  போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு  தகவல்கள் வெளியானது. 

அதன் விவரம் வருமாறு:வெண்டிபாளையம் பவளம் வீதியைச் சேர்ந்தவர் சரவணன் இவர் அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் நாய், கோழி குதிரை பண்ணைகள் நடத்தி வந்தார். மேலும் லக்காபுரத்தில்  உள்ள டாஸ்மாக் பாரை  குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். 

மவுலி சிறுவயதிலிருந்தே சரவணனிடம் நட்பாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மவுலி கூடாத நட்பால் அடிதடி கொலை முயற்சி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அவர் மீது மொடக்குறிச்சி, ஈரோடு வடக்கு போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக மவுலியை  சந்திப்பதை சரவணன் தவிர்த்து வந்துள்ளார்.

இதற்கிடையில்  லக்காபுரத்தில் சரவணனின் மதுக்கூடத்துக்கு  மவுலி குடித்துவிட்டு அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு லக்காபுரம் வந்த மவுலி அங்குள்ள சரவணனின் மதுக்கூடத்துக்குச்  சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் மவுலி மீது சரவணனுக்கு ஆத்திரம் ஏற்பட்டதாம்.. இதைத் தொடர்ந்து சரவணன் மற்றும் அவருடைய நண்பர்கள் மூன்று பேர் சேர்ந்து மவுலியை சோலார் அடுத்த பாலுசாமி நகரில் உள்ள காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் தெரியவந்தது. 

இந்நிலையில் தலைமறைவாக இருந்த  சரவணன் நண்பர்கள் ஊமையன் என்கிற சிவகுமார், பிரதாப், குணா என்கிற குணசேகரன் ஆகிய 3 பேரை மொடக்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.  இந்நிலையில் கொலை செய்யப்பட்ட மவுலி உடல்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவவடிக்கை எடுக்கப்படுகிறது.

Top