logo
ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும்: ஆட்சியர் பேட்டி

ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: ஆட்சியர் பேட்டி

28/Feb/2021 06:14:08

ஈரோடு, பிப்:  ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க  வேண்டும் என்றார் மாவட்ட  ஆட்சியர் சி. கதிரவன்.

ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன்  செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம்  வெள்ளிக்கிழமை மாலை தேர்தல் தேதியை அறிவித்தது முதல் தமிழகம் உள்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை  விதி முறைகள் அமலுக்கு வந்துள்ளன. 

அதன்படி, ஈரோடு மாவட்டத்திலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அனைத்து அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் தேர்தல் நடத்தை விதி முறைகளை கடைபிடித்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு வழங்க  வேண்டும். பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இனி நடத்தப்பட மாட்டாது. 

அனைத்து அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வார்கள். பொதுமக்களுக்காக ஆட்சியர்  அலுவலகத்தில் வைக்கப்படும் பெட்டியில்  பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக அளிக்கலாம்.   

தேர்தல் தொடர்பாக ஆட்சியர்  அலுவலகத்தில் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைபொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். இதைப்போல் 2267672 என்ற டி .ஓ.டி எண்ணுக்கு  24 மணி நேரமும் தொடர்பு கொள்ளளாம். 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 8 ஆர்.ஓஸ் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்  சனிக்கிழமை  மாலை அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தொடர்பான தகவலை பரிமாறுவார்கள். 

நகரப் குதிகளில் எந்த ஒரு சுவர் விளம்பரமும் தட்டிலும் வைக்க அனுமதி இல்லை. ஆனால் அதே நேரத்தில் கிராமபுரங்களில் மட்டும் தனியார் இடங்களில் விளம்பரம் வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது ஆனால் அந்த கட்டிட உரிமையாளர் அனுமதியும், அந்தப் தொகுதி ஆர். ஒஸ்யிடம்  அனுமதி பெற்று வேண்டும்.  ஒரு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ரூ. 30 லட்சத்து 80 ஆயிரம் வரை செலவு செய்து கொள்ளலாம். 

ஈரோடு மாவட்டத்தில் முதலில் 2,265 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. கொரோனா காலகட்டம் என்பதால் ஆயிரத்து 50 க்கு மேல் உள்ள வாக்குச்சாவடி மையங்களை  இரண்டாகப் பிரிக்க வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி கூடுதலாக 526 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 2741 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம்926 இடங்களில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 13 ஆயிரத்து 157 அரசு அலுவலர் பணியாளர்களும், 193 மைக்ரோ அப்சவர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

நமது மாவட்டத்தை பொறுத்தவரை 80 வயதுக்கு மேல் 50 ஆயிரத்து 62 பேர் உள்ளனர். இவர்களுக்கு தபால் ஓட்டு வசதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் விரும்பினால் நேரடியாக வாக்குச்சாவடி மையங்களுக்கு வந்து ஓட்டும் அளிக்கலாம். அதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 13 ஆயிரத்து 157 பேர் உள்ளனர். ராணுவ வீரர்கள் 298 பேர் உள்ளனர்.ராணுவ வீரர்கள்  ஆன்லைன் மூலம் தபால் ஓட்டு மூலம் மூட்டுகளில் அளிக்கலாம். மற்றவர்களுக்கு எவ்வாறு ஓட்டு அளிக்கலாம் என்பது குறித்து முடிவு செய்யப்படும். 

கோபி ,சத்தியமங்கலம், தொகுதிகளுக்கு கோபி கலை அறிவியல் கல்லூரியில் வாக்கு பதிவு எண்ணப்படும். அதேபோன்று மற்ற 6  தொகுதிகளுக்கும் சித்தோடு ஐ.ஆர். டி.டி யிலும் வாக்குகள் எண்ணப்படும்.  மாவட்டத்திலுள்ள 2741 வாக்குச்சாவடி மையங்களில் 111 வாக்குச்சாவடி மையங்கள் மலைப் பகுதியில் அமைந்துள்ளன.18 வாக்குச்சாவடி மையங்களில் இணையதள வசதி இல்லை. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வீடியோ மூலம் வாக்குகள் பதிவு செய்யப்படும்.  மாவட்டம் முழுவதும் 76 ஹெல்த் பிரைமரி சென்டர்கள் உள்ளது.

 வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். அதேபோன்று வாக்காளர்கள் கிளவுஸ் அணிந்து தான் வாக்கு பதிவு செய்ய வேண்டும். இதற்காக ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஒரு கிளவுஸ் வழங்கப்படும். சமூக இடைவெளியும் பின்பற்ற வேண்டும். மாவட்டத்தைப் பொருத்த வரைபறக்கும் படையினர் தங்களது பணியை தொடங்கி விட்டனர். 

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை 192 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கணக்கிடப்பட்டுள்ளது. அதுவும் கடந்த கால தேர்தல் அடிப்படையில்தான் கணக்கிடப் பட்டுள்ளது.மாநகர்  பகுதியில் அரசு கட்டிடத்தில் ஒட்டப்பட்டுள்ள சுவர் விளம்பரம் அழிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கண்டிப்பாக  கொரோனா  தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆனால் அவர்களை கட்டாயப்படுத்த முடியாது. அது அவர்கள் விருப்பம்.இவ்வாறு அவர் கூறினார்.

Top