26/Nov/2020 10:10:12
ஈரோடு: நிவர் புயல் காரணமாக வியாழக்கிழமை கூடும் ஈரோடு மாட்டுச் சந்தைக்குபாதிக்கு குறைவான மாடுகளே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதன் காரணமாக வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டு சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வாரங்களாக சந்தைக்கு விற்பனைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில் நிவர் புயல் காரணமாக மாடுகள் வரத்து பாதியாக சரிந்தது.
மேலும் வெளிமாநில, மாவட்ட வியாபாரிகளின் வருகையும் வெகுவாக பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர். இது குறித்து உள்ளூர் மாடு வியாபாரிகள் கூறியதாவது, மழையின் காரணமாக சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவர வேண்டிய மாடுகள் பாதி கூட வரவில்லை. வளர்ப்பு கன்றுகள், பசு மாடுகள், எருமைகள் என 750-க்கும் மேல் வழக்கமாக விற்பனைக்கு வரும்.
ஆனால் மழையின் காரணமாக மொத்தமாகவே 200 தான் கொண்டுவரப்பட்டிருந்தது. கர்நாடக மாநிலத்தில் இருந்து வர வேண்டிய வியாபாரிகளும் வரவில்லை. கேரள, ஆந்திர மாநில வியாபாரிகள் மிக குறைந்த அளவிலேயே வந்திருந்தனர். இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கன்றுக்குட்டிகள் மட்டுமே ஓரளவு விற்பனையானது. விலையில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு கூறினர்.