20/Feb/2021 09:48:25
ஈரோடு, பிப்: மத்திய அரசுடன் இணக்கமான அரசு அமைந்தால்தான் மாநிலங்கள் வளர்ச்சி பெறும் என்றார் பாஜக முன்னாள் தேசிய செயலர் ஹெச். ராஜா.
கோவைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்பது தொடர்பாக ஈரோட்டில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தல் மூலம் தமிழக மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் .தமிழகத்தில் கிஷன் சமான், ஆயுஸ் மான் பாரத் போன்ற மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் மேற்கு வங்கம் ,கேரளாவில் இந்தத் திட்டங்கள் செயலப்படுத்த வில்லை. எதிர்கட்சிகளின் காழ்ப்புணர்ச்சியால் பாதிக்கப்பட்டது அந்த மாநில மக்கள்தான்.
எனவே மத்திய அரசுடன் இணக்கமான அரசு மாநிலத்தில் அமைந்தால் மட்டுமே மாநில மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும். பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை ஏற்றம் என்பது சராசரியான விலையேற்றம் தான். காங்கிரஸ் ஆட்சியை விட குறைவு. உணவுப் பொருட்களின் விலையேற்றம் காங்கிரஸ் ஆட்சியை விட குறைவு .
காங்கிரஸ் ஆட்சியில் விலையேற்றம் 3.9 சதவீதம் என்றும் பாரதிய ஜனதா ஆட்சியில் 2.6 சதவீதம் தான். ஆரியர் என்பது பண்பாளர், ஆசிரியர், உயர்ந்தவர் என்பது தான் அர்த்தம் என்றும் திருவள்ளுவர் உயர்ந்தவர் என்றார் ஹெச். ராஜா. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் சிவசுப்ரமணி, மாநில பிரசார அணி சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.