logo
 அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 3-ஆவது நாளாக நீடிப்பு- மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டமும் தொடர்கிறது

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 3-ஆவது நாளாக நீடிப்பு- மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டமும் தொடர்கிறது

24/Feb/2021 10:54:54

ஈரோடு, பிப்: ஈரோட்டில் 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி  அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் 3-ஆவது நாளாக நீடித்து வருகிறது. இதே போல மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டமும் தொடர்கிறது.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்குரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ .5 லட்சம் வழங்க வேண்டும். பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு உள்ளூர் பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 3 வருட பணி முடித்த மினி மைய ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 

10 வருட பணி முடித்த உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று முன்தினம் முதல் மாநில தழுவிய காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். அதன்படி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. 

மாவட்டத்தில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் காத்திருப்பு போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது. 100க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் போராட்டக் களத்திலேயே இரவு முழுவதும் கடும் பனி பொருட்படுத்தாமல் தங்களது காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். இதற்காக தாலுகா அலுவலகத்தில் உள்ள காலி இடத்தில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் அவர்கள் இரவு தூங்கினர்.

இந்நிலையில் புதன்கிழமை  3-ஆவது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் ,உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. நேரம் செல்ல செல்ல பல்வேறு பகுதியில் இருந்தும் அங்கன்வாடி ஊழியர்கள் இன்று தாலுகா அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு போராட்ட களத்திலேயே உணவு வழங்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாகவும் ரூ.3 ஆயிரமாகவும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத வேலைவாய்ப்பை உத்தரவாதம் செய்ய வேண்டும் உள்பட கோரிக்கையை வலியுறுத்தி  மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் குடியிருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இரவு கடும் பணி, குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய  குடியேறும் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். இன்று இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டனர்

Top