18/Dec/2020 09:21:28
ஈரோடு-டிச: ஈரோடு மாவட்டம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியபுலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவமுகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ஜம்பை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நடத்திய இந்த சிறப்பு மருத்துவ முகாமை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையடுத்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் கூறியதாவது: இம்மருத்துவ முகாமில் பொது மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர், மகப்பே றுநல மருத்துவர், பல் மருத்துவர், சித்த மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், எலும்பு சிகிச்சை மருத்துவர், தோல், கண், மூக்கு காது, தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர், பெண் நல மருத்துவர் ஆகிய சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும் ஸ்கேன் வசதி, செமி ஆட்டோ அனலைசர் மூலம் இரத்த பரிசோதனை, I.C.T.C. ஆலோசனை - எய்ட்ஸ் பரிசோதனை, E.C.G. பரிசோதனை, இரத்தப்பரிசோதனை, இரத்தம், சர்க்கரை, கொழுப்பு, மலேரியா பரிசோதனை, கர்ப்பப்பை வாய்புற்று பரிசோதனை, அல்ராசோனாகிராம், கண்புரை ஆய்வு குறைபாடு, சிறுநீர் பரிசோதனை, இனப்பெருக்க மண்டல நோய், மேற்சிகிச்சை பரிந்துரை ஆகியவை மேற்கொள்ளப்படுகிறது.மேலும் இம்முகாமில் சுமார் 250 பொதுமக்கள் பரிசோதனை மேற்கொண்டனர். எனவே, அரசின் இந்த மருத்துவ முகாமை பொதுமக்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என்றார் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன்.
தொடர்ந்து, முகாமில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, கர்ப்பிணி பெண்களுக்கான சிகிச்சை அறையினை திறந்து வைத்தார்.மேலும், 4 கர்ப்பிணி பெண்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதியுதவியும், 6 கர்ப்பிணி தாய்மார்களுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் 4 தாய்மார்களுக்கு அம்மா பரிசு பெட்டகம், கர்ப்பிணி பெண்களுக்கு இயற்கை ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினார்.
முன்னதாக, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் குறித்து அமைக்கப்பட்டிருந்த கருத்து காட்சியினையும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனை விளக்க செய்தி மலர் ஒளிபரப்பையும் அமைச்சர் பார்வையிட்டார்.