19/Feb/2021 05:26:37
ஈரோடு, பிப்: ஈரோடு மாநகர் பகுதியில் ஜி.ஹெச் ரவுண்டானா பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. ஈரோடு ஜி.ஹெச். ரவுண்டானாவில் பிரப் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், கே.வி.என். சாலையிலிருந்து வரும் வாகனங்கள், ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து சவிதா வழியாக பெருந்துறை சாலையில் கோவை திருப்பூர் பெருந்துறை செல்லும் வாகனங்கள், நசியனூர் செல்லும் வாகனங்களும் ஒரே நேரத்தில் செல்வதால் இந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுதியாகவே காணப்படும்.
இதனால் இந்த பகுதியில் வாகன ஓட்டிகள் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும்.இங்கு சிக்னல் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாக சென்று வந்தது. இதனால் சில நேரங்களில் விபத்தும்நிகழ்ந்துள்ளது.
இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் டிராபிக் சிக்னல் செயல்பட தொடங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்த்தால் பழைய நிலையைவிட அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதாவது கே.வி.என் சாலை, பெருந்துறை சாலை, பிரப் சாலை ஆகிய சாலைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.இதற்கு வாகன ஓட்டிகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் டிராபிக் சிக்னல் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் ஈரோடு ஜிஹெச் ரவுண்டானா பகுதியில் டிராபிக் சிக்னல் மீண்டும் செயல்பட தொடங்கியதும் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கே.வி.என். சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.மேலும் இந்தப் பகுதியில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உள்ளதால் ஆம்புலன்ஸ் சென்று வருவதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதேபோல் பிரப் சாலை, பெருந்துறை சாலையிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்பட்டது.
இதனால் பொறுமை இழந்த சில வாகன ஓட்டிகள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்த பகுதியில் சிக்னல் வேண்டாம் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர். இந்நிலையில் பிற்பகலில் டிராபிக் சிக்னல் அகற்றப்பட்டு மீண்டும் பழைய முறையில் வாகனங்கள் செல்ல தொடங்கியது. இதையடுத்து அந்தப் பகுதியில் போக்குவரத்து சீரானது.